தூக்குவாளி, வாழைஇலையில் மாமிசம்... அப்ப டாஸ்மாக்ல எதுல குடிப்பாங்க
சென்னை: தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக்கடைகளில் கண்ணாடி டம்ளர் பயன்படுத்தப்படுகிறது.
50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ, இருப்பு வைப்பதற்கோ தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிளாஸ்டிக் ஒழிப்பை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிகை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், டீக்கடைகளில் தூக்குவாளிகளில் பார்சல் தரப்படுகிறது. இறைச்சி கடைகளில் வாழை இலைகளில் மடித்தும், தூக்குவாளிகளிலும் கொடுத்தனுப்பபடுகிறது. அதே நேரம், டாஸ்மாக் மதுக்கடைகளில் பழைய சாராய பார்முலாவுக்கு வந்தது போல், பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர் பயன்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் தடை உத்தரவு தீவிரமாக பின்பற்றப்படும் என்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மளிகை கடைகளில் காகிதம், மற்றும் துணிப்பை பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது.