ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்.. ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமே சீராக குடிநீர் வழங்க ஏற்கனவே அரசு ரூ.710 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை, அதை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் குடிநீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தற்போது கூடுதல் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு இரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டுள்ளது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 21, 2019
தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #TNGovt #savewater
அதன்படி தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது .இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள குடிநீர் விநியோகம் பற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிவுரைகள் வழங்கியதாக கூறுப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் சீராக குடிநீர் வழங்கும் வகையில், இந்த ஆண்டு, ஏற்கனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பின், குடிநீர் திட்டப் பணிகளுக்கென கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் ரயிலில் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.