சபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ
சென்னை: வீட்டுல ஒரு முருங்கை மரம் வளர்க்க முடியுதா..? கஷ்டப்பட்டு தண்ணீர் ஊற்றி, தேவைப்பட்டால் உரமும் வைத்து ஆளாக்கி வளர்த்துவிட்டால், அப்புறம் அவ்வளவுதான். ஊர்ல போறவங்க, வர்றவங்கல்லாம் நம்ம முருங்கை மரத்தில்தான் ரொம்ப உரிமையோடு காயை பறித்துச் செல்வார்கள்.
சப்போஸ்.. 'கையும் களவுமா' சிக்கினாலும்.. அட நம்ம மரம்தானக்கா.. அதான் ரெண்டு காய் பறிச்சேன். கடையில வேற கிடைக்கவே மாட்டேங்குதுக்கா.. என அல்வா கொடுத்துவிட்டு, நைசாக சென்றுவிடுவார்கள்.
"பண்றது திருட்டு.. இதுக்கு லாஜிக் வேறையா" என்று நரம்புகள் புடைக்க நமக்கு கோபம் வந்தாலும், பல்லைக் கடித்து சமாளிப்போம். ஆனால் முருங்கை காயை மட்டும் பறித்துச் சென்றால், பரவாயில்லை. சிலர் கிளைகளை உடைத்து ஹாயாக இடத்தை காலி செய்வார்கள். சிலர் ஒரு காய் என சொல்லிவிட்டு, மரத்தில் ஒரு காய்கூட இல்லாத அளவுக்கு மரத்துக்கே மொட்டையடித்து, பறித்து சென்றுவிடுவார்கள்.
இப்படி பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி ஜீவன், தனது முருங்கை மரத்தில், எழுதி தொங்கவிட்டுள்ள ஒரு அறிவிப்பு பலகை, இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. காலண்டரின் இரு பக்கத்திலும், அந்த அறிவிப்பு எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
ஒரு பக்கத்தில், "கிளையை ஒடிக்காமல் திருடவும்" என்றும், மற்றொரு, பக்கத்தில், "2 காய மட்டும் திருடவும்" என்றும் எழுதி தொங்க விட்டுள்ளனர். அட்வைஸ் செய்த மாதிரியும் ஆச்சு.. 'உரிமை' என்ற பெயரில் பறித்துச் செல்பவர்களை திருடர்கள் என்று முகத்தில் அடிச்ச மாதிரி சொன்னதாகவும் ஆச்சு. எப்படி இருந்த ஐடியா?