கார் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த போதை ஆசாமி.. புகார் கொடுக்காமல் விட்ட விஜயகாந்த்
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை பார்க்க வந்த தொண்டர் ஒருவர் அவரது கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். எனினும் அவர் மீது விஜயகாந்த் புகார் ஏதும் தரவில்லை.
தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவரது தொண்டர்கள், ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடுநிலையானோருக்கும் பிடித்தமான ஒருவர். அவர் வெள்ளை மனசுக்காரர், குழந்தை மனசுக்காரர், இளகிய மனம் படைத்தவர் என்பதால் அவர் மீது கட்சி பேதமின்றி மக்களுக்கு ஒரு அன்பு உண்டு.
தமிழக அரசியலில் தற்போது நடைபெற்று வரும் செயல்களை பார்த்துவிட்டு விஜயகாந்தின் உடல்நலம் சரியாக இருந்தால் இன்னேரம் நடப்பதே வேறு என மக்கள் புலம்புகிறார்கள்.
முதலமைச்சரை சந்திக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்... 2 மணி நேரம் போராடி மனு அளித்த திமுக எம்.எல்.ஏ.
போட்டி
2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணியில் போட்டியிட்டாலும் எந்த பாகுபாடுமின்றி ஜெயலலிதாவையே சட்டசபையில் எதிர்த்தவர் நம்ம கேப்டன். அப்படிப்பட்ட விஜயகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.
விஜயகாந்த் பிறந்தநாள்
கடந்த 25-ஆம் தேதி விஜயகாந்தின் 69ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அன்று குடும்பத்தினருடன் செல்பி புகைப்படம் வெளியிட்ட விஜயகாந்தின் ட்வீட் வைரலானது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேற்று இரவு 11.30 மணிக்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென விஜயகாந்தின் வீட்டின் கேட்டை தட்டினார்.
போலீஸார்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை தடுத்தனர். பின்னர் அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். எனினும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டு ரகளை செய்தார். மேலும் என் தலைவன் விஜயகாந்த்தை உடனே பார்க்க வேண்டும் என்றார்.
கார் கண்ணாடி உடைப்பு
பின்னர் அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விஜயகாந்தின் கார் கண்ணாடியை ஓங்கி அடித்தார். அதில் கார் கண்ணாடி உடைந்தது. அவரை தடுக்க முயன்ற போலீஸாரையும் போதை ஆசாமி தாக்கினார். தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (37) என்பது தெரியவந்தது.
புகார் கொடுக்காத விஜயகாந்த்
அந்த இளைஞர் தனது மார்பில் கேப்டன் என பச்சை குத்தியிருந்தார். விஜயகாந்தை பார்க்க வேண்டி இது போல் அவர் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனினும் இது தொடர்பாக விஜயகாந்த் தரப்பில் இருந்து போலீஸில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.