நீ என்ன பெரிய இவனா... அமைச்சர் முன்னிலையில்... நிருபர்களை அடிக்கப்பாய்ந்த அதிகாரி!
சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் செய்தியாளர்களை அரசு அதிகாரி அடிக்கப்பாய்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் படம் எடுத்துக்கொண்டிருந்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் முத்துலிங்கம் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்றுகொண்டிருந்தார்.
இதனால் சார், சார், கொஞ்சம் தள்ளி நில்லுங்க என செய்தியாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர். அப்போது யாரை தள்ளச் சொல்கிறாய், நீ என்ன பெரிய இவனா என ஒருமையில் பேசியதோடு தன்னை தள்ளச் சொன்ன செய்தியாளர்களை அடிக்கப்பாய்ந்தார். மதுபோதையில் அவர் இருப்பதை அறிந்த அமைச்சர் செங்கோட்டையன் அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள் முத்துலிங்கத்தை விழாவில் இருக்கவேண்டாம், உடனடியாக கிளம்புங்கள் என விரட்டியடித்தனர். இருப்பினும் உதவி செயற்பொறியாளர் முத்துலிங்கம் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி 15-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மது அருந்திவிட்டு அரசு விழாவிற்கு வர என்ன தைரியம் என லெட்ப் அண்ட் ரைட் வாங்கினாராம். மேலும், முத்துலிங்கத்தை இடைநீக்கம் செய்யவும் அவர் கேட்டுக்கொண்டாராம்.