பயிற்சி டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் 10 பேர் படுகாயம்... ஸ்டிரைக்குக்கு முடிவு காண்பாரா முதல்வர்!
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் 50% பஸ்களே இயக்கப்படுகின்றன. பல இடங்களில் 20% பஸ்களே இயக்கப்படுகின்றன.
பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்களின் கூரை மீது அமர்ந்தபடியும் படியில் தொங்கியவாறும் ஆபத்தான நிலையில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டையில் பயிற்சி டிரைவர் ஒட்டிச்சென்ற பஸ் விபத்தில் சிக்கியதால் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.
20% பஸ்களே இயக்கம்
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் 50% பஸ்களே இயக்கப்படுகின்றன. பல இடங்களில் 20% பஸ்களே இயக்கப்படுகின்றன.அதுவும் பல்வேறு கிராமப்புறங்களில் நிலைமை படுமோசமாக உள்ளது.
கூரை மீது ஆபத்தான பயணம்
அங்கு இயக்கப்பட்டு வந்த ஓரிரண்டு பஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்து உள்ளனர். கிராமப்பகுதிகளில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். பெருங்கூட்டத்தால் பஸ்களின் உள்ளே இடம் இல்லாததால் அவர்கள் பஸ்களின் கூரை மீது அமர்ந்தபடியும் படியில் தொங்கியவாறும் ஆபத்தான நிலையில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்காலிக பயிற்சி டிரைவரால் விபத்து
நிலைமையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்கி வருகிறது. தற்காலிக டிரைவர்கள் இயக்கம் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி பஸ் ஒன்றை தற்காலிக டிரைவர் ஓட்டி வந்தார். உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே சென்றபோது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது, அந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் இரண்டு பஸ்களும் அதிக சேதம் அடைந்தது.
தமிழக அரசு சுமூக தீர்வு காண வேண்டும்
பஸ்கள் விபத்துக்குள்ளானதால் சென்னை செல்வதற்கு வேறு பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து மாற்று பஸ் ஏற்பாடு செய்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. அரசு பஸ்களை பயிற்சி ஓட்டுனர்களை வைத்து இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், பஸ்கள் அதிகளவு இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து தொழிலாளர்களை உடனடியாக தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.