துரைமுருகன் கதற.. ஸ்டாலின் கண் கலங்க.. சட்டசபையில் பெருக்கெடுத்த சோகம்!
சட்டப்பேரவையில் துரைமுருகன் இன்று உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
Recommended Video
சென்னை: "தன் பிள்ளைகளை விட எனக்குதான் அதிக உரிமை தந்தவர் கலைஞர், எனக்கு 2-வது முறை உயிர் கொடுத்தவரும் கலைஞர்தான்" என்று பேசிய துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.
அறிவாலயம், கோபாலபுரம் போன்ற இடங்களில் எல்லாம் சிரிப்பு சத்தம் வெடித்து கேட்கிறது என்றால் அங்கே துரைமுருகன்தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.
கருணாநிதிக்கு துரைமுருகன் பேச்சு என்றால் ரொம்ப பிடிக்கும். சில சமயங்களில் துரைமுருகனை அழைத்து உட்கார சொல்லி பேச சொல்லிகூட கேட்பாராம். அது மட்டும் இல்லை... சட்டமன்றத்தில் துரைமுருகன் பேச்சிற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
பச்சை தமிழர் பன்னீர் என என்னை பாராட்டியவர் கருணாநிதி.. ஓபிஎஸ் நெகிழ்ச்சி
கவுண்ட்டரில் கலக்குவார்
அடுத்தவர் போன்று மிமிக்ரி செய்வதும், முகபாவனை செய்வதும், கவுண்ட்டர் அடிப்பதிலும் கலக்குவார் துரைமுருகன். அதனால் இவருக்கு கட்சிபேதமின்றி ஜெயலலிதா உட்பட எல்லாருமே விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்பேர்ப்பட்ட துரைமுருகன் இன்று சட்டபேரவையில் கதறி கதறி அழுதார்.
பன்முகத்தன்மை
கருணாநிதி மறைவுக்கு துணை முதல்வர் புகழஞ்சலி செலுத்தப்பட்டபோது, அதனை வழிமொழிந்து துரைமுருகன் பேச ஆரம்பித்தார். அப்போது, கருணாநிதியின் தமிழ் மீதான காதல், அரசியல், கவிதை, வசனம், என அவரது பன்முகத்தன்மை குறித்து புகழ்ந்து தள்ளினார்.
குரல் கரகரத்தது
தமிழுக்காக, தமிழ் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக உழைத்து விட்டு அண்ணாவின் பக்கத்திலே இப்போது ஓய்வெடுக்கிறார் என்று துரைமுருகன் கூறினார். பிறகு தனக்கும் கருணாநிதிக்குமான உறவு குறித்த பேச்சு எழும்போது, திடீரென அவரது குரல் கரகரத்தது.
95 ஆண்டு காலம்
உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகள் வெளியே தெறித்தன. அப்போது அவர் சொன்னதாவது: "கலைஞர் 95 ஆண்டு காலம் அதாவது 34 ஆயிரத்து 258 நாட்கள் வாழ்ந்தவர். இதில் எம்எல்ஏவாக பணியாற்றியது 20 ஆயிரத்து 411 நாட்கள். அதாவது 56 ஆண்டு காலம் எம்எல்ஏவாக பணியாற்றி இருக்கிறார். நான் வாழ்ந்த நாளில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையில் அமர்ந்து பணியாற்றியவர்.
கண்ணீர் சிந்தும் நிலை
என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து உயர்த்தியவர். தனது பிள்ளைகளை விட எனக்கு அதிக உரிமை தந்தவர் கலைஞர். எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கலைஞர்தான். நான் அன்று இறந்திருந்தால் என் உடல் மேல் அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் என்னுடைய துர்பாக்கியம் என் தலைவர் உடல் மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது" என்று பேசும்போதே கண்ணீர் விட்டு கதறி அழுதார் துரைமுருகன்.
கதறி அழுதார்
அதற்கு மேல் அவரால் பேசவும் முடியவில்லை. துரைமுருகன் அழுததை பார்த்ததும், பக்கத்தில் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் கண் கலங்கி விட்டனர். பின்னர், தொடர்ந்து பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்ததும் திரும்பவும் கதறி கதறி அழுதார் துரைமுருகன். அப்போது ஸ்டாலின் அவரை சமாதானப்படுத்தினார்.