சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா? ஓட்டு வித்தியாசத்தில சாதனை படைக்கணும்... உதயநிதி நேர்காணல் கலகல
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்டத்துக்கான வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றார்.
சென்னை: போட்டியிட சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா? எவ்வளவு செலவு பண்ணுவீங்க போன்ற சம்பிரதாய கேள்விகள் மட்டுமல்லாது வாக்கு வித்தியாசம் சாதனை படைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று உதயநிதியிடம் சொல்லியிருக்கிறாராம் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை விருப்பமனுக்கள் பெறப்பட்டன, இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 234 தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் 5 நாட்கள் திமுக நேர்காணல் நடத்தியது. கடந்த 2ம் தேதி தொடங்கிய திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது.
அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல்
நேர்காணல் குழுவில் தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை. முருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, எச். ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
கொளத்தூரில் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினிடம் திமுகவினர் நேர்காணல் நடத்தினர். கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதே போல, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
ஜெயிச்சிருவீங்களா?
விருப்பமனு தாக்கல் செய்தவர்களை அமர வைத்து கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நின்று கொண்டே கேள்விகளுக்கு பதிலளித்தார். சீட் கொடுத்தா ஜெயிச்சிருவீங்களா? தொகுதியில உங்களுக்கு செல்வாக்கு எப்படி இருக்கு என்று துரைமுருகன் கேட்க நேர்காணல் கலகப்பாகவே நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை
தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று கேட்டதோடு, நிற்கும் தொகுதியில் ஜெயித்து சாதனை படைக்கும் அளவிற்கு ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் துரைமுருகன். சிரித்துக்கொண்டே நிச்சயம் ஜெயிப்பேன் என்று உதயநிதி சொல்ல கடைசி நாள் நேர்காணல் கலகலப்பாகவே முடிந்துள்ளது.