கலைஞர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார்.. ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளால் துரைமுருகன் ஆனந்த கண்ணீர்
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும். ஆனால் அவரோ மறுத்துவிட்டார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பொதுக்கூட்டம் திருச்சியில் சிறுகனூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில் எத்தனையோ மாநாடுகள், பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளேன். என் வாழ்நாளில் இது போன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை.
இந்த கூட்டத்தை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. இளைஞர் தானே ஸ்டாலின் என கணக்கு போட்டார்கள் சிலர். கருணாநிதி மறைந்து இந்த 18 மாதங்களில் கழகத்தை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
7 முக்கிய துறைகளை சீரமைத்தால் தமிழகம் தலைநிமரும்- உறுதிமொழியை வெளியிட்ட ஸ்டாலின்
ஸ்டாலின்
கொரோனாவுக்காக சோர்ந்து விடாமல் கழகத்தை எப்போதும் போல சுறுசுறுப்பாக இயக்கினார். அதிமுக ஆட்சியை ஸ்டாலினால் கவிழ்த்திருக்க முடியும். ஆனால் கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வர ஸ்டாலின் விரும்பவில்லை. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெ அணி பிரிந்த போது ஆட்சியை கவிழ்க்க கருணாநிதியை நிறைய பேர் கேட்டார்கள்.
புழக்கடையில் திமுக ஆட்சிக்கு வராது
ஆனால் அவரோ புழக்கடை வழியில் திமுக ஆட்சிக்கு வராது. பொதுமக்கள் வாக்களித்துதான் வரும் என கூறி மறுத்துவிட்டார். தற்போது அதே காரணத்தையே ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 234 தொகுதிகளில் நடத்தியுள்ளார்.
18 மாதங்கள்
இன்னும் 12 தொகுதிகள்தான் பாக்கி. அங்கும் விரைவில் நடத்தி முடித்துவிடுவார். 18 மாதத்தில் அவர் செய்த புதுமை, கோட்டைக்கு போக வழியனுப்பும் கூட்டம்தான் இந்த மகத்தான கூட்டம். இந்திய ஜனநாயகத்தை காக்க புனித போராட்டத்தை துவக்க போகிறீர்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்
எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லாத பெருமையை பெற்றுள்ளார் ஸ்டாலின். பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக கழகத்தை கட்டிக் காக்கும் நீங்கள் எங்கள் வாழ்நாளையும் சேர்த்து வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என துரைமுருகன் தெரிவித்தார். ஸ்டாலின் 7 உறுதிமொழிகளை வெளியிட்டவுடன் அவரை ஓடி வந்து கட்டி அணைத்த துரைமுருகன் கண்ணீர் விட்டார். பின்னர் மைக்கில் சென்று கருணாநிதி சாகவில்லை, அவர் ஸ்டாலின் உருவில் உயிரோடு இருக்கிறார் என கூறி அழுதார். அவரை கே என் நேரு உள்ளிட்டோர் தேற்றினர்.