நாளை மாலை கட்சிப் பொறுப்பேற்கிறார் துரை வைகோ... தாயகத்தில் தடபுடல் ஏற்பாடுகள்.!
சென்னை: மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோ நாளை மாலை முறைப்படி கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.
இதையொட்டி சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமையகமான தாயகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..!
மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக பதவியேற்ற பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார் துரை வைகோ.
மதிமுக
ரகசிய வாக்கெடுப்பில் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வாக்களித்ததன் அடிப்படையில் அவருக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் பதவியை கொடுத்துள்ளார் வைகோ. மகனுக்காக யாருடைய பதவியையும் பறிக்காமல் புதிய நியமனம் ஒன்றை அறிவித்தார் வைகோ. இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் முகாமிட்டிருக்கும் துரை வைகோ நாளை சென்னை செல்லவுள்ளார்.
சாலை மார்க்கமாக
கலிங்கப்பட்டியிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் அவர், கார் மூலம் சாலை மார்க்கமாக சென்று திருச்சியில் மதிமுக நிர்வாகி இல்ல மண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்கவுள்ளார். அந்த திருமண விழாவை முடித்தவுடன் சென்னை நோக்கி செல்லும் அவர், மாலை 4 மணியளவில் அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். அந்த நிகழ்வுக்கு பிறகு மதிமுக தலைமையகமான தாயகத்துக்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
தலைவர்களிடம் வாழ்த்து
பிறகு முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொதீதின், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, என வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப் பெறும் திட்டத்தில் இருக்கிறார்.
சென்னையில் முகாம்
இதனிடையே துரை வைகோவுக்கு தலைமைக்கழகச் செயலாளர் பதவி மட்டும் போதாது இளைஞரணியில் முக்கியப் பதவி கொடுக்க வேண்டும் என மதிமுக மாணவரணி நிர்வாகிகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். துரை வைகோ பொறுப்பேற்பதை ஒட்டி அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து மதிமுகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.