அவருகிட்ட போய் கூட சொன்னேன்.. மன்னிச்சிடுறோம்னேன்.. கேட்கலியே.. துரைமுருகன் பேட்டி
சென்னை: இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறிய தகவல் சரியல்ல என்பதால், அவருக்கு எதிராக திமுக உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தது.
இலங்கை அகதிகளுக்கும், இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் வழியில்லை என்பது தொடர்பாக திமுக இன்று சட்டசபையில் பிரச்சினை கிளப்பியது. இதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என்பதால், குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அவர்கள் சேர்க்கப்படவில்லை என்றார்.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே, இதுதொடர்பாக பதிலளித்துள்ளதாகவும், அதில், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என கூறியுள்ளதாகவும், எனவே பாண்டியராஜன் அவைக்கு தவறான தகவலை தெரிவிக்கிறார் என்றும் திமுகவினர் குரல் எழுப்பினர்.
திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலினா.. உதயநிதியா .. பரபரப்பைக் கிளப்பும் ஜோதிடர்கள்!
உரிமை மீறல்
அவைக்கு தவறான தகவலை தெரிவித்ததாக, திமுகவை சேர்ந்த தங்கம் தென்னரசு, பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை கிளப்பினார். இதை விசாரித்த சபாநாயகர், அமைச்சர் தவறான தகவல் கூறியதாக சொல்ல முடியாது என, கூறி, திமுக எழுப்பிய பிரச்சினையை தள்ளுபடி செய்தார். இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்எல்ஏக்கள், துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
அதிகாரம் இல்லை
அவைக்கு வெளியே நிருபர்களை சந்தித்தார், துரைமுருகன், அப்போது அவர் அளித்த பேட்டியை பாருங்கள்: தமிழக அமைச்சராக இருக்க கூடியவர் மாஃபா பாண்டியராஜன். இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஈழத் தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவோம் என்று, தமிழக அமைச்சர் கூறுவது சரியல்ல. தங்கம் தென்னரசு இந்த பிரச்சினையை அழகாக கிளப்பி பேசினார்.
மத்திய அரசு வேலை
தங்கம் தென்னரசுக்கு பதில் சொல்ல வந்த அமைச்சர், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம் முதல் முள்ளிவாய்க்கால் வரை ஏதேதோ பேசினாரே தவிர, கேள்விக்கான உரிய பதில் சொல்லவில்லை. இலங்கை தமிழர்களுக்கு இவர் எப்படி இரட்டை குடியுரிமை வழங்குவார்? அவைக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை கொடுக்க அதிகாரம் உள்ள மத்திய அமைச்சர், இல்லை, தரமுடியாது என்கிறார். எடுபிடி நிலையில் இருந்து கொண்டு, இவர், குடியுரிமை கொடுப்பேன் என்கிறார்.
அருகே போய் கூட சொன்னேன்
எனவேதான், அவைக்கு தவறான தகவலை தந்த பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பினோம். சபாநாயகர் மகா உத்தமர். அவருகிட்ட போய் கூட சொன்னேன். மத்திய அரசுக்குதான் இதில் அதிகாரம் உள்ளது. ஆனா, அவங்களே முடியாது என்கிறார்கள். எனவே சபாநாயகரே.., நீங்களாவது அமைச்சரிடம் இதை எடுத்துச் சொல்லுங்கள். நாங்கள் வேண்டுமானால் மன்னிச்சுவிட்டுவிடுகிறோம் என்று சொன்னேன். ஆனால் அவர் சொன்னதுதான் சரி என்கிறார் சபாநாயகர். என்ன செய்ய?. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.