3 யானைங்க வந்துச்சு.. எல்லாம் போச்சு.. துரைமுருகன் போலவே தோட்டமும் "வளமா" இருந்தா.. சபையில் குபீர்
துரைமுருகன் - திண்டுக்கல் சீனிவாசனால் அவையில் சிரிப்பலை எழுந்தது
சென்னை: "ஆசை ஆசையா என் தோட்டத்துல லுமிச்சை செடி வெச்சேன்.. 3 யானை வந்து நாசம் பண்ணிடுச்சு.. சரி போகட்டும்னு முருங்கை தோட்டம் போட்டேன்.. அதையும் நாசம் பண்ணிடுச்சு" என்று துரைமுருகன் சொல்ல.. "துரைமுருகனை போலவே, அவரது தோட்டமும் "வளமாக" இருந்தால் யானைகள் வராமல் என்ன செய்யும்?" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளிக்க.. சட்டப்பேரவையில் அனைவருமே சிரித்துவிட்டனர்!
அனல் பரபரக்கும் சட்டமன்ற நிகழ்வுகளில் சில சிரிப்பு சீன்களும், பரஸ்பர நட்புக்கள் பரிமாற்றமும் கட்சி பேதமின்றி அவ்வப்போது அரங்கேறும்.
கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது இது சர்வசாதாரணமாக நிகழும்.. கருணாநிதி பொடி வைத்து எதையாவது பேசிவிட்டால் போதும்.. உடனே சிரிப்புதான்... இவரது சிலேடை பேச்சு ரொம்ப பிரபலம்!
ஜெயலலிதா
அதேபோலதான் துரைமுருகனும்.. ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து எதையாவது சொல்லிவிடுவார்.. இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா.. கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் அன்று வெகுஇயல்பாக பழகினார்கள்.. சட்டசபையில் நட்பும், பரஸ்பரமும் தினமும் இழையோடும்... நீண்ட நாளைக்கு பிறகு அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றுதான் நேற்று நடந்துள்ளது!
திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் இடையே விவாதம் நடந்தது.. துரைமுருகன் அப்போது, "யானைகள் காட்டை விட்டு வெளியேறி தோட்டங்களை துவம்சம் செய்து வருவது அதிகமாகிவிட்டது.. அவ்வளவு எதற்கு.. காட்பாடியில என் வீட்டு தோட்டத்திலேயே யானைகள் மூன்று முறை உள்ளே புகுந்துவிட்டன.. ஆசை ஆசையாய் எலுமிச்சை செடிகளை வெச்சிருந்தேன்.. எல்லாத்தையும் நாசம் பண்ணிடுச்சு... சரி போகட்டும்ன்னு முருங்கை தோட்டம் போட்டேன்.. அதையும் துவம்சம் செய்துவிட்டன" என்றார்.
யானைகள்
உடனே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எழுந்தார்.. இதற்கு பதிலளிக்கும்போது, "எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனை போலவே அவரது தோட்டமும் வளமாக இருக்கின்றன போலம்.. அவர் வீட்டு தோட்டத்து ருசி அந்த யானைகளுக்கு அவ்வளவு பிடித்துவிட்டன... துரைமுருகனை போலவே, அவரது தோட்டமும் வளமாக இருந்தால் யானைகள் வராமல் என்ன செய்யும்?
சிரிப்பலை
அதனால், யானைகளுக்கு பிடிக்காத பயிர்களை விவசாயம் செய்தால் நல்லா இருக்குமே என்று யோசனை கூறினார். இதை கேட்டதும் துரைமுருகன் உட்பட அவையில் இருந்தவர்கள் எல்லாருமே சிரித்துவிட்டனர்... பிறகு, "விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி கூறினார்.