அண்ணா அறிவாலயம் டூ மெரினா கடற்கரை... கருணாநிதி நினைவிடத்தில் முதல் மரியாதை..!
சென்னை: திமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற துரைமுருகனும், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பாலுவும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல் மரியாதை செலுத்தினர்.
பொதுக்குழு முடிந்தவுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து நேராக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தை நோக்கி நிர்வாகிகளின் கார்கள் சீறின.
அங்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் மரியாதை செலுத்தினர்.
திமுக பொதுக்குழு வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய முதல் உரை... என்ன பேசினார்...?
பொதுக்குழு நிறைவு
காலை 10 மணிக்கு தொடங்கிய திமுக பொதுக்குழு பிற்பகல் 3 மணிக்கு க்கு நிறைவடந்தது. அதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் பலர் நேராக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். அங்கு நமது லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற வாசகம் மலர்களால் அலங்கரிப்பட்டு இருந்தது.
உருக்கமான பேச்சு
முன்னதாக பொதுக்குழுவில் ஏற்புரை ஆற்றிய துரைமுருகன், மு.க.ஸ்டாலினுக்கு என்றும் துரோகம் நினைக்கமாட்டேன் என்றும் தமது மறைவுக்கு பிறகும் தமது குடும்பம் ஸ்டாலினுக்கு நன்றியுள்ள குடும்பமாக இருக்கும் எனவும் உணர்ச்சிப்பொங்க பேசினார். அதிமுகவுக்கு வருமாறு எம்.ஜி.ஆரே. தன்னை சட்டையை பிடித்து அழைத்தும் முடியாது என மறுப்பு தெரிவித்தவன் நான் என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
24 மணி நேரமும் அழைக்கலாம்
துரைமுருகனுக்கு முன்னதாக பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தன்னை 24 மணி நேரமும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அழைக்கலாம் என்றும் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இப்போதே தேர்தல் நிதி கொடுக்க தொடங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த தயாநிதிமாறனை பார்த்து நீங்க தான் முதல் நிதி கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதுடன் பொதுக்குழு அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
வெற்றிகரமாக
திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வுக்காக நடைபெற்ற பொதுக்குழுவை எவ்வித சலசலப்புமின்றி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின். அதுவும் காணொலி காட்சி வடிவில் மூன்றாயிரத்து 500 பேருக்கும் மேல் இந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டனர். இதனிடையே இந்த பொதுக்குழு கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என டி.ஆர்.பாலு தனது உரையின் போது குறிப்பிட்டு பேசினார்.