எடப்பாடியாருக்கு டீ, காபியோடு "அல்வா"வும் தந்துவிட்டார் ஆளுநர்.. போட்டு தாக்கும் துரைமுருகன்!
7 பேர் விடுதலை குறித்து துரைமுருகன் ஆளுநரை விமர்சித்துள்ளார்
சென்னை: முதல்வரிடம் "செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு, டீ, காபி குடித்துவிட்டு.. அல்வா கொடுத்து அனுப்பியிருக்காரர் ஆளுநர்" என்று 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலூர் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் "தேர்தல் சட்ட அலுவலகம்" திறப்பு விழா நடந்தது.. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆளுநர் வித்தியாசமாக செயல்படுகிறார்... அமைச்சர்களை மதிப்பது போலவும் தெரியுது.. மதிக்காததை போலவும் தெரியுது.. முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
அப்போது, "செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு, டீ, காபி குடித்துவிட்டு.. அல்வா கொடுத்து அனுப்பியிருக்கார். ஆனால், அதுக்கு முன்னாடியே லெட்டர் எழுதிவிட்டார் என்று இப்பதான் தெரியவருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் நாங்க என்னமோ நாடகமாடுவதாக சொல்கிறார். இதில் யார் நாடகமாடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். முதல்வரிடம் உண்மையை மறைத்துப் பேசும் குணம் ஆளுநருக்கு இருப்பது பாராட்டுக்குரியதல்ல. இப்போதாவது ஜனாதிபதி வாயை திறந்து எனக்கு தான் அதிகாரம் அல்லது, ஆளுநருக்கு தான் அதிகாரம் என்று பதில் சொல்ல வேண்டும்.
பல நேரங்களில் மௌனம் காத்து, பிரச்சனைகளுக்கு மோசடி வேலை செய்கிறார்கள். இதில் உச்சநீதிமன்றம் என்ன நினைக்கிறது என்பதை தெரிவிக்கவேண்டும். இந்த நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது தெரியவேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் இப்படி ஒரு நாடகம் நடக்கிறது என்றால் இது குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல்வர் இப்போது கொஞ்சம் கலங்கி போய் உள்ளார். அவர்களது கட்சியின் சூழ்நிலைகளால் அரசியலில் தெளிவில்லாமல் பேசி வருகிறார். தமிழகத்தின் உரிமைகளை டெல்லி சென்று பெறுவதற்கு தமிழக அமைச்சர்களுக்கு தைரியமில்லை" என்று தெரிவித்தார்.