விலகிய பொன்முடி.. விழுப்புரத்திற்கு நா.புகழேந்தி நியமனம்.. துரைமுருகன் போட்ட முதல் உத்தரவு
சென்னை: திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்
கடந்த செப்டம்பர் 9ம் தேதி திமுகவின் பொதுக்குழுகூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது. ஜூம் செயலி வாயிலாக நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், மூத்ததலைவர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என்றுசுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்
ஆபரேஷன் துரைமுருகன் ஆரம்பம்... மு.க. அழகிரியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்?
துணை பொதுச்செயலாளர்
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளா் பதவிக்கு துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டார்கள். பொதுச்செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்றார். இதேபோல் அனைவரும் அவரவர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்
பொன்முடி விலகல்
விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் பொன்முடி துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதால் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் துரைமுருகன் போட்ட முதல் உத்தரவாகும்.
அன்பில் மகேஷ் நியமனம்
முன்னதாக திமுகவின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டதால் கே என் நேரும் அண்மையில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார் . அவருக்கு மாநிலம் முழுவதும் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள கடிதங்களை படித்து பார்த்து, தீர்வு காணும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் நியமனம் செய்யப்பட்டார்.
சென்னையில் மாற்றம்
அண்மைக்காலமாக திமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஜெ அன்பழகன் மறைவை அடுத்து சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சிற்றரசு நியமனம் செய்யப்பட்டார். இதற்கு உதயநிதி தான் காரணம் என்று அப்போது பரபரப்பு ஏற்பட்டது.