"அவங்களுக்கு முன்னாடி.. நான்லாம் சாதாரணமான ஆளு.. பயமா இருக்குங்க".. அதிர வைத்த துரைமுருகன்
இந்த பொறுப்பை ஏற்பதில் பயம் கலந்த மகிழ்ச்சி என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்
சென்னை: "பயமா இருக்கு" என்று துரைமுருகன் சொல்லி இதுவரை நாம் கேட்டிருக்கோமா? இன்று சொல்லி இருக்கிறார்.. வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு துரைமுருகன் பகிரங்கமாக செய்தியாளர்களிடம் சொல்லி உள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பொதுச்செயலாளராக மூத்த தலைவர் துரைமுருகன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது:
"வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாபெரும் இயக்கம் திமுக... அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவி என்பது மிக உயர்ந்தது மட்டுமல்ல, பொறுப்பு வாய்ந்ததும்கூட.. பல கடமைகளை உள்ளடக்கியது... அண்ணா இந்த இயக்கத்தின் பொது செயலாளராக இருந்துள்ளார், நாவலர் நெடுஞ்செழியன் இருந்துள்ளார்... எங்கள் பேராசிரியர் இருந்துள்ளார்... அடுத்து நான் இந்த இயக்கத்தின் பொது செயலாளராக வந்திருக்கிறேன்.
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன்.. பொருளாளராக டி.ஆர்.பாலு.. போட்டியின்றி தேர்வாகிறார்கள்!
அண்ணா
இதில் ஒரு பெரிய உண்மை என்னவென்றால், அண்ணாவும், நெடுஞ்செழியனும், அன்பழகனும் திமுகவை உருவாக்கியவர்கள்... அவர்கள் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்கள்... ஆனால், நான் அந்த இயக்கத்தில் தொண்டனாக சேர்ந்தவன்.. இப்போது இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒரு அதிர்ச்சியும் இருக்கிறது... அதிர்ச்சி மட்டுமில்லை, அந்த மாபெரும் தலைவர்கள் ஆற்றிய பணியில் நான் செயல்பட முடியுமா என்கிற பயமும் இருக்கிறது... ஆக, பயம் கலந்த மகிழ்ச்சி எனக்கு" என்றார்.
துரைமுருகன்
பயமா? துரைமுருகனுக்கா என்ற ஆச்சரியம் இப்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.. காரணம், துரைமுருகனை பொறுத்தவரை மிகச்சிறந்த அறிவாளி.. எதையுமே புள்ளி விவரங்களுடன் எடுத்து வைத்து பேசுவார்.. குறிப்பாக, துரைமுருகன் சட்டசபையில் கலகலப்பாக இருக்கும்.
ஜெயலலிதா
ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து எதையாவது சொல்லிவிடுவார்.. இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா... இவர் பேச்சை ரசிப்பார்.. அதனால் கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் வெகுஇயல்பாக பழகுவார்கள்.. இவரை உட்கார வைத்து பேச சொல்லி கேட்பாராம் கருணாநிதி.
உடன்பிறப்புகள்
இப்படி எத்தனையோ ஸ்பெஷாலிட்டி உள்ள துரைமுருகன், இன்று புதிதாக கிடைத்த அந்த பொறுப்பை ஏற்க, பயமாக இருக்கிறது என்று சொல்லி உள்ளது ஆச்சரியத்தையே தருகிறது. ஆனால், பதவி, பொறுப்பாக எதுவாக இருந்தாலும், தூள் கிளப்பி விடுவார் துரைமுருகன் என்பதுதான் உடன்பிறப்புகளின் ஆழ்ந்த நம்பிக்கை!