பெத்த பதவியை பெற்ற பின்னரும் அகோரி சித்தர் சந்திப்பு- திமுகவில் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: திமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில் அகோரி சித்தரை துரைமுருகனும் அவரது மகனும் சந்தித்து ஆசி வாங்கியிருப்பது திமுகவில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளர் பதவி எங்கே தமக்கு கிடைக்காமலேயே போய்விடுமோ என அழுது புலம்பியவர் துரைமுருகன். ஆளும் கட்சியுடன் ரகசிய உறவில் இருக்கிறாரே என ஆதங்கப்பட்டுதான் துரைமுருகனுக்கான புரமோஷனுக்கே செக் வைத்தார் ஸ்டாலின்.
பின்னர் வழக்கம்போல பேசி பேசி மனதை கரைத்த துரைமுருகன் ஒருவழியாக நினைத்ததை முடித்துவிட்டார். திமுகவின் மிக உயரிய பதவியான பொதுச்செயலாளராகவும் ஆகிவிட்டார். ஏற்கனவே மகனை எம்.பி.யும் ஆக்கிவிட்டார் துரை.
டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவடன் மந்திராலோசனை நடத்தும் தினகரன்
துரைமுருகனின் பாதை
துரைமுருகனை பொதுச்செயலாளராக்கிய போதே நம்மிடம் பேசிய சில சீனியர்கள், இனி பாமகவை ஜாதி அடிப்படையில் திமுக அணிக்கு கொண்டு வந்து சேர்ப்பார்; பாஜகவுடன் இணக்கமாக போக அட்வைஸ் செய்வார்; டெல்லி மத்திய அமைச்சரவையில் எப்படியாவது திமுக இடம்பெற வேண்டும் என அழுத்தம் கொடுத்துப் பார்ப்பார் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
டெல்லி இணக்கம்
கல்லூரிகள், தொழிற்சாலைகள் என கொடிகட்டிப் பறக்கும் துரைமுருகன் குடும்பத்துக்கு டெல்லியின் அரவணைப்பு அவசியம். அந்த குடும்பத்தின் அரவணைப்புகாக ஒட்டுமொத்த திமுகவையே அங்கே கொண்டு சேர்த்துவிட்டாலும் விடுவார்.. துரைமுருகன்தான் என்று இல்லை.. சில முக்கிய திமுக தலைவர்களே இப்படித்தான் தீவிரமாக இருக்கிறார்களே.. .என்கிற குமுறலும் திமுகவில் இருக்கிறது.
சித்தரை சந்தித்த துரைமுருகன்
இந்நிலையில்தான் குடியாத்தம் அருகே மகாதேவ மலை ஆனந்த சித்தர் ஆசிரமத்தில் இருக்கும் அகோரி சித்தரை மகன் சகிதமாக துரைமுருகன் சென்று சந்தித்தார். துரைமுருகனை அந்த அகோரி சித்தர் எப்போதும் வாடா போடா என கூறுவார். துரைமுருகனுக்கும் மகனுக்கும் மரியாதை செய்த கையோடு, மகன் முதல்வராவார் என ஒரு அருள்வாக்கு ஒன்றையும் உதிர்த்திருக்கிறார். இந்த அகோரி சித்தர் சந்திப்பு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
துரைமுருகன் மீது அதிருப்தி
இதில் செமகடுப்பில் இருப்பது திமுக தலைமைதானாம். அதேபோல பல சீனியர் தலைவர்களும் பேராசிரியர் இருந்த பதவி.. அந்த பதவிக்கு அவமரியாதை செய்யும் வகையில் இப்படி எல்லாம் நடக்கலாமா? என குமுறி இருக்கின்றனர். ஆனாலும் என் வழி தனி வழி என ரூட் போட்டு போய்க்கொண்டே இருக்கிறாராம் துரை அண்ணன்.