துரைமுருகன் மகன், சகோதரருக்கு கொரோனா... குடும்பத்தில் ஒரே நேரத்தில் மூவருக்கு வைரஸ் பாதிப்பு
சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த்திற்கும் துரைமுருகன் சகோதரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வரும் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனுக்குக் கடந்த 8ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து அவரது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரை முருகனின் சகோதரர் துரை சிங்காரம் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக அவர்கள் வீட்டிலேயே தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் குடும்பத்திலேயே மூன்று பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.