துரைமுருகன் மகனுக்கு அடித்த ஜாக்பாட்... சென்னை கோட்டத்தில் முக்கிய பதவி
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.
வேலூர் தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யானவர் கதிர் ஆனந்த். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை பார்ப்பதற்கு அமைதியாகவும், யாரிடமும் நெருங்கிப் பழகத் தெரியாதவராகவும் இருந்த அவர் இன்று அவரது தந்தையையே அரசியலில் விஞ்சிவிடுவார் போல் தெரிகிறது.
மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்று இன்னும் பதவியேற்றுக்கொள்ளாத நிலையில், கதிர் ஆனந்த் தென்னகரயில்வேயில் முக்கிய பதவியை பெற்றிருப்பது திமுக சீனியர் எம்.பி.க்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் என்ற பதவியை தயாநிதிமாறன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த அந்தப் பதவியை பெற்றிருக்கிறார்.
துரைமுருகன் ஏன் இப்படி செய்கிறார், ஒரு சீனியர் நிர்வாகிக்கு தெரியவேண்டாமா இவ்வளவு பெரிய முக்கிய பதவியை அரசியலில் சூப்பர் ஜூனியருக்கு கொடுக்கலாமா என்று, வடதமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம்.
தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி என்பது மிகுந்த அதிகாரம் மிக்க ஒன்று என்றும், புதிய திட்டங்களை கொண்டு வருவதில் இந்தப் பதவியில் இருப்பவர்கள் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.