சல்லி, சல்லியா நொறுக்கிய துரைமுருகன்.. திமுக பழைய ஃபார்முக்கு வரும்போதா இப்படியாகனும்!
Recommended Video
சென்னை: தண்ணீர் பிரச்சினையால் மக்கள் மத்தியில் ஆளும் அதிமுகதான் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறது என்றால், எதிர்க்கட்சியான திமுகவும், தத்தளித்துக் கொண்டுதான் உள்ளது.
சென்னையில் இந்த வருடம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை என்பதால், குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. இப்போது அதற்கும் பஞ்சம்.
எனவே, சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு வேலூல் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வர அரசு உத்தரவிட்டது.
நோ வாட்டர்
இந்தநிலையில்தான், திமுக பொருளாளரும் வேலூர் மாவட்டத்துக்காரருமான துரைமுருகன், அப்படி தண்ணீர் எடுத்து செல்ல விடமாட்டோம் என்றும், மீறி, தண்ணீர் எடுத்தால் போராட்டம் நடத்துவோம் என்றும், அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் சென்னை மக்களின் கோபம் ஆளும் அதிமுகவைவிடவும், இப்போது, திமுக மீது திரும்ப துரைமுருகனின் இந்த கருத்து காரணமாக மாறியுள்ளது.
திமுக கோட்டை
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சென்னை மாவட்டம் எப்போதுமே திமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படுவது. சமீப காலமாகத்தான் ஜெயலலிதா அந்த டிரெண்ட்டை மாற்றி அதிமுக அதிக சட்டசபை தொகுதிகளை வெல்லும் அளவுக்கு மாற்றினார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் சென்னையின் 3 தொகுதிகளையும் திமுக வென்றது. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும், திமுகவுக்கே வெற்றி. திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 68 ஆயிரத்து 23 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக அலை
தலைநகரத்தின் டிரெண்ட், தமிழகம் எங்கும் எதிரொலித்தது. இப்படியாக, மீண்டும் தலைநகரை கைக்குள் கொண்டுவந்த சந்தோஷத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும்போதுதான், துரைமுருகனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கு எதிராக அதிமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துரைமுருகன் பேச்சு வழிகோலியுள்ளது.
கர்நாடகா பாணி
இன்னொரு பக்கம், தார்மீக ரீதியாகவும் துரைமுருகன் பேச்சு சரிதானா என்ற கேள்வி எழுகிறது. காவிரியில் தண்ணீரை திறந்துவிடுங்கள் என தமிழகம் கேட்கும்போது, எங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை, உங்களுக்கு எப்படி விட முடியும் என்று கர்நாடகா கேட்பதற்கும், வேலூர் மாவட்டத்துக்கே தண்ணீர் இல்லை, சென்னைக்கு தரமுடியுமா என, துரைமுருகன் கேட்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது என்கிறார்கள், சமூக செயற்பாட்டாளர்கள்.
பகிர்ந்துண்டு வாழ்வோமே
தமிழர்களுக்குள்ளேயே இப்படி, மாவட்ட ரீதியாக வேறுபாடை விதைத்துவிட்டு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிடம் எந்த உரிமையில் நம்மால் நெஞ்சை நிமிர்த்தி இனி தண்ணீர் கேட்க முடியும் என்ற கேள்வியை துரைமுருகன் பேச்சு எழுப்பியுள்ளது. பங்கிட்டு வாழ்வதுதானே தமிழன் குணம். வேலூர் மக்களில் கணிசமானோர் சென்னையில் பணி புரிபவர்கள், அல்லது தொழில் செய்பவர்கள். அவர்களுக்கும் சேர்த்துதானே, இந்த தண்ணீர் செல்கிறது. இப்படி பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பும் குணத்தை தமிழரிடமிருந்து பிரிக்கும் வகையில் துரைமுருகன் பேசுவது, அவர் சார்ந்த கட்சிக்கும் சேர்த்துதானே இழுக்கு.. என்றெல்லாம் கேள்விகள் எழும்புகிறது.