வழக்கமாக எச். ராஜாதான் ஆதரவு தெரிவிப்பார்.. பொன். மாணிக்கவேலுக்கு துரைமுருகனும் ஆதரவு குரல்!
பொன்.மாணிக்கவேலுக்கு துரைமுருகன் ஆதரவு கரம் நீட்டி உள்ளார்.
சென்னை: நாலாபக்கமும் பொன்.மாணிக்கவேலுக்கு எதிர்ப்பு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டதில் இருந்தே பொன் மாணிக்கவேலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக எல்லா எதிர்ப்புகளையும் அரசு தரப்புதான் சொல்லி வருகிறது.
பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக கூடுதல் துணை காவல் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் காவலர்கள் டிஜிபியிடம் ஏற்கனவே 2 முறை புகார் கொடுத்துவிட்டனர். இன்னொரு பக்கம், பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போட சொல்வதாக கூறி சிலை கடத்தல் தடுப்பு காவலர்கள் சிலர் தங்களுக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தும் உள்ளனர்.
சி.வி.சண்முகம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, சட்ட அமைச்சர் சிவி சண்முகம் "கூடுதல் துணை காவல் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் டிஜிபியிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், பொன் மாணிக்கவேலு நல்லவர் என்று யார் சொன்னது'' என்று தடாலடியாக கேட்டு பேட்டியும் தந்தார்.
துரைமுருகன்
இப்படி பல்வேறு கண்டனங்கள், விமர்சனங்கள் பொன்.மாணிக்கவேலு மீது எழுந்து வருகிறது. இந்த நிலையில்தான் திமுக பொருளாளர் துரைமுருகன் பொன்.மாணிக்கவேலு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
பனிப்போர்
''சிலை திருட்டு மிக ஆபத்தானது, சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதா என சந்தேகம் எழுகிறது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுவை தமிழக அமைச்சரே விமர்சிக்கலாமா?" அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது. அதிகாரிகள் இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் நடத்த இயலாது" என்றார்.
கடும் அதிருப்தி
எப்போதுமே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாதான் பொன்.மாணிக்கவேலுக்கு சப்போர்ட் ஆக இருப்பார். ஆனால், இப்போது துரைமுருகனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது ஆளும் தரப்புக்கு மேலும் எரிச்சலைதான் தந்துள்ளதாக கூறப்படுகிறது.