பொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்
சென்னை: திமுகவின் பொருளாளராகவே துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த நாளன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை துரைமுருகன் ஆதரவாளர்களை ரொம்பவே காயப்படுத்திவிட்டதாம்.
Recommended Video
திமுகவில் கருணாநிதியின் வலது கரமாக திகழ்ந்தவர் துரைமுருகன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர் துரைமுருகன்.
ஆனால் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆன போதும் கூட அவர் பக்கம் செல்லாமல் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என கருணாநிதியுடனேயே இருந்தவர் துரைமுருகன். இதனால் அவர் மீது கருணாநிதி பாசத்துடன் இருந்தார்.
கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா.. நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை
துரைமுருகன் மீது பாசம்
திமுக ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான பொதுப்பணித்துறை எப்போதும் துரைமுருகனுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். பொதுப்பணித்துறை சார்ந்த விவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர் துரைமுருகன். சட்டசபை விவாதங்களில், செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த விவரங்களை வெளியிட்டு அசத்தும் அசாத்திய வல்லமை கொண்டவர் துரைமுருகன். இதனால் துரைமுருகனை கருணாநிதி தன் அருகிலேயே வைத்துக் கொண்டார்.
பொதுச்செயலாளர் பதவி
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின், திமுக தலைவரான போதும் கூட துரைமுருகனுக்கான முக்கியத்துவம் தொடர்ந்தது. இதனாலேயே திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைந்த நிலையில் அந்த இடத்துக்கு துரைமுருகன் நிறுத்தப்பட்டார். இதற்காக துரைமுருகன் தம் வசம் இருந்த பொருளாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை அப்போது ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தும் இருந்தார்.
கொரோனாவால் ஒத்திவைப்பு
ஆனால் கொரோனா பாதிப்பால் துரைமுருகன், பொதுச்செயலாளராவது தள்ளிப் போனது. திமுகவின் பொருளாளர் பதவியும் போய், பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்காமல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற ஒற்றை பதவியுடன் மட்டுமே துரைமுருகன் இருந்து வந்தார். இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதை அவ்வப்போது திமுக தலைமைக்கும் அவர்கள் தெரியப்படுத்தியும் வந்தனர்.
கருணாநிதி பிறந்த நாளில் அறிக்கை
இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்த நாளான நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் பொருளாளராகவே துரைமுருகன் நீடிப்பார் என அறிவித்திருக்கிறார். இதனால் பொதுச்செயலாளர் பதவி துரைமுருகனுக்கு கைக்கு எட்டியும் கிடைக்காமலேயே போய்விட்டது. இதற்கு காரணம் ஆளும் தரப்புடன் மிக மிக நெருக்கமாக துரைமுருகன் இருக்கிறார் என்கிற புகார்கள்தானாம். இருந்த போதும் கருணாநிதி பிறந்த நாளில் பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்பதை வெளிப்படுத்தும்விதமாக பொருளாளராகவே நீடிப்பார் என திமுக தலைமை அறிவித்திருப்பது ரொம்பவே காயப்படுத்துகிறது என குமுறுகின்றனர் துரைமுருகன் ஆதரவாளர்கள்.