மோடி தொகுதியான காசியில் தாய் வீட்டாருடன் துர்கா ஸ்டாலின்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான காசிக்கு துர்கா ஸ்டாலின் சென்றுள்ளதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார்.
என்னதான் திராவிட கொள்கைகளை கருணாநிதியும் மு.க.ஸ்டாலினும் கடைபிடித்து வந்தாலும் தன் கட்சியினரோ குடும்பத்தினரோ கோயிலுக்கு செல்வதை அவர்கள் தடுத்ததே இல்லை.
இதனால் துர்கா ஸ்டாலின் எப்போதும் கோயில், யாகம், பூஜை , புனஸ்காரம் என்றிருப்பார். தற்போது பொதுத் தேர்தல், இடைத்தேர்தல் என அடுத்தடுத்து களை கட்ட தொடங்கவுள்ளன.
கிடைக்கும்
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் வெற்றி பெற்று வருகிறது. இதனால் ராகுல் மட்டுமல்லாது ஸ்டாலினும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த வெற்றி அப்படியே தமக்கு தமிழக சட்டசபை தேர்தலில் கிடைக்கும் என நம்புகிறார்.
யார் யார்
இந்நிலையில் ஸ்டாலினின் மனைவி துர்கா , தனது தாய் வீட்டாருடன் காசிக்கு சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துள்ளார். இவருடன் அவரது அக்காள் பார்வதி, அவரது கணவர் சண்முகசுந்தரம், தங்கை ஜெயந்தி ஆகியோர் சென்றுள்ளனர்.
திடீர் விஜயம்
மேலும் துர்காவின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தியும் உடன் சென்றுள்ளார். காசிக்கு அதுவும் மோடியின் தொகுதிக்கு துர்காவின் திடீர் விஜயம் குறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் விசாரித்தோம்.
ஜோசியர் வாக்கு
அப்போது அவர்கள் கூறுகையில் காசிக்கு தனது குடும்பத்தினருடன் செல்வது என்பது துர்காவின் நீண்ட நாள் ஆசை. அதோடு மோடியின் தொகுதிக்கு போய்விட்டு வருமாறு ஜோசியரும் கூறியுள்ளார் என்றனர். அதனால் துர்கா ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் விதமாக காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துள்ளார்.