அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டால் பரபரப்பு.. சொத்து குவிப்பு வழக்கு பதிவு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது. இவர் மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
2011ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில் பின்னர் 90 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 90 கோடி அளவுக்கு சொத்துகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எஸ்.பி.வேலுமணி வழக்கு- பா.வளர்மதியின் மாஜி உதவியாளர் சென்னை கான்டிராக்டர் வெற்றிவேல் வீட்டில் ரெய்டு
20 இடங்களில்
வேலூர், திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெறுகிறது. அது போல் பெங்களூரில் வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும் சென்னையில் 4 இடங்களிலும் சோதனை செய்கிறார்கள்.
திருமண மண்டபம்
ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் அவரது வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெறுகிறது. அது போல் திருப்பத்தூரில் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு
ஒசூரில் சிப்காட்டில் பல கோடி மதிப்பிலான நிலத்தை ஆண்டுக்கு வெறும் ரூ 1 வீதம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு முன்னாள் அமைச்சர் வீரமணியின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. முதலில் மாமனார் பெயரில் பதிவு செய்துவிட்டு பின்னர் தனது பெயரில் மாற்றியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இவர் வணிக வரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த இவர், சொத்துகளின் மதிப்பை குறைத்து பதிவு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி துறை அமைச்சர்
திமுக தேர்தல் அறிக்கையில் ஊழலில் திளைத்த அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வர் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.