'செக்..' சிக்கலில் மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.. நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்
சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த வரும் 25 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அவரை ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போதே ஊழல் ஒழிப்பு என்பதைப் பிரதானமாக முன் வைத்து திமுக தலைவர்கள் பிரசாரம் செய்தனர். அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல்களைப் பட்டியல் போட்டு பிரசாரம் செய்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.
அதேபோல இதற்காகத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விரைவில் தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் திமுக தலைவர்கள் அனைத்து மேடைகளிலும் முழங்கினர்.
கார் மோதி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி -முதல்வர் அறிவிப்பு
திமுக அரசு
திமுக தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த சமயத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதிலேயே அரசு இயந்திரம் முழுமையாக இயங்கியது. ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததும், மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கையைத் தொடங்கியது திமுக அரசு!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரெய்டு
அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரைக் குறிவைத்தே முதலில் ரெய்டு நடக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், முதல் டார்கெட்டாக சிக்கியவர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஜூலை மாதம் இறுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகம் என 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு
கடந்த 2016- 2021 ஆம் ஆண்டு வரை எம்.ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கி குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இது தொடர்பாக விசாரிக்கக் கடந்த செப். 30 ஆம் தேதி கிண்டியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல் பணியைக் காரணம் காட்டி அவர் விலக்கு கேட்டிருந்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்
இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் அக். 25ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் இறுதியில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 25 லட்ச ரூபாய், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எம்ஆர் விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக வலம் வந்த வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரூ 23 லட்சம், 4.87 கிலோ தங்க நகைகள், 136 கன ரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.