சீமான் இனி பொதுமேடைகளில் கட்சி ஆரம்பித்தேனா என கேட்பார்... தி.வி.க. விடுதலை ராஜேந்திரன் அட்டாக்
சென்னை: கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தாய்மதம் திரும்பச் சொல்லவே இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்டி அடித்திருப்பதை திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராஜேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நாங்கள் இந்துக்கள் அல்ல.. எங்கள் மதம் சைவம். சிவனியம். எங்கள் மதம் மாலியம் (வைணவம்). கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம், இஸ்லாம் அரபு மதம். அனைவரும் மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல தாய் மதம் திரும்ப வேண்டும் என்றார்.
சீமானின் இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட வலதுசாரிகள் வரவேற்றனர். அதேநேரத்தில் சீமானின் பேச்சு இந்துத்துவ குரலாக இருப்பதாக கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
Exclusive: ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டது அவருக்கே தெரியாது -கதிர்
சீமான் விளக்கம்
இதனையடுத்து பெரம்பலூர் நிகழ்ச்சியில் இது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்தார். நான் மதம் பரப்ப வந்தவன் அல்ல. இனம் பரப்ப வந்தவன் . நான் தாய்மதம் திரும்புங்கள் என்று சொன்னேனா? என்னுடைய எச்சிலில் கட்சி நடத்துகிறார்கள் சிலர். அவர்களுக்கு கொள்கை, கோட்பாடுகள் எதுவும் இல்லை என விளக்கம் தந்தார். சீமானின் இந்த பல்டி பேச்சும் விமர்சிக்கப்பட்டது.
தி.வி.க. அட்டாக்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராஜேந்திரன் இன்று விமர்சித்து பதிவிட்டுள்ளதாவது: தாய் மதம் திரும்பச் சொன்னேனா ? நானா ?" ஒரு வாரம் கூட முடியவில்லை; என்ன குடைச்சலோ தெரியவில்லை. நமது மதம் சைவம், மாலியம் அனைவரும் தாய் மதத்துக்கு திரும்புங்கள், மர செக்கு எண்ணைய்க்கு திரும்புவதைப் போல என்று ஒரு தலைவர் (சீமான்) பேசினார். சுற்றியிருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். இப்போது, 'நான் அப்படி பேசவே இல்லையே ராஜா, என்னுடைய அரசியலே மத அரசியல் இல்லையே என்னுடையது இன அரசியல் தானே. நான் பேசாத ஒன்றை ஏன் பேசியதாக சொல்றீங்க ?' என்று அவரே பேசுகிறார்.
அடுத்து இப்படித்தான் பேசுவார்
சுற்றி நின்றவர்கள் இன்னும் வேகமாக கை தட்டி மேலும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து, 'நான் கட்சி ஆரம்பித்தேனா ? அப்படி யார்கிட்டையாவது சொன்னேனா ? எந்த மேடையிலாவது நா பேசியிருப்பேனா ?' என்று இவரே பேசுவார். அப்போதும் சுற்றி இருப்பவர்கள் இதைவிட உணர்ச்சிவசப்பட்டு மேலும் அதிகமாக கை தட்டி கொண்டே இருப்பார்கள்.
வடிவேலு இல்லாத குறையை..
அதற்குப் பிறகு மேடையில் வந்து மவுனமாக நின்று கொண்டே இருப்பார். கை, உடல், காலை மட்டும் ஆட்டுவார். ஒரு சிரிப்பை சிரிப்பார். அப்போது கை தட்டல் இன்னும் வேகமாக இருந்து கொண்டே இருக்கும். மக்கள் இதை பார்த்துக் கொண்டு கை தட்ட மாட்டார்கள். வடிவேலு இல்லாத குறையை மனுசன் போக்கிட்டாரு பாருங்க என்று ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பார்கள்.