திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் கட்டாயம்.. கட்டுப்பாடுகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது?.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் திருமண விழாக்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாட்டுகள் தொடரும்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
இதிலும் கடந்த மே 24 முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கொரோனா குறைய, குறைய பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னைக்கு கூடுதல் தளர்வுகள்
இந்த ஊரடங்கு தளர்வுகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த வகையாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் கட்டாயம்
இதை தவிர மற்ற மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருமண விழாக்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளில் திருமணம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை,
எப்படி விண்ணப்பிக்கணும்?
சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று திருமண விழாக்களுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெறவுள்ள மாவட்டத்தின் கலெக்டர்களிடம் இணையவழியாக https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.