தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ பாஸ் கட்டாயம்.. முதல்வர் பழனிசாமி
சென்னை: மண்டலங்களுக்குள் இன்று முதல் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் மட்டுமே இன்று முதல் பேருந்து போக்குவரத்து நடந்து வருகிறது. அதே போல் இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கார், பைக், வேன், உள்ளிட்ட எந்த தனியார் வாகனங்களும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்ததாவது: "தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஊரடங்கு : கொரோனா நிவாரணம் ரூ.1000 வீடு வீடாக வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு
செங்கல்பட்டில் ஊரடங்கு
சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்த உத்தரவிடப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க 15.6.2020 அன்று உத்தரவிடப்பட்டது.
மதுரையில் 7 நாட்கள்
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியதுபோல் 24.6.2020 அன்று அதிகாலை 0.00 மணி முதல் 30.6.2020 அன்று நள்ளிரவு 12.00 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரேஷன்கார்டு
இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப
அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 27.6.2020 முதல் சம்மந்தப்பட்ட துறையினர்
அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
தடுக்க இயலவில்லை
மேலும், 24ம் தேதி (நேற்று) நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்கள், தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல (Zonal) முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில்
இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகனப் போக்குவரத்தில் மண்டல
முறைக்கு பதில், இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்திற்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற மாவட்டங்களிலிருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
மண்டல முறை ரத்து
இந்தக் கருத்து ஏற்கப்பட்டு, இன்று (25.6.2020) முதல் 30.6.2020 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். கொரோனா நோய் பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க அரசுடன் இணைந்து செயல்படஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து மண்டலங்களுக்குள் பேருந்துகள் எதுவும் இன்று இயக்கப்படவில்லை. தனியார் வாகங்கள் இ பாஸ் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களுக்கு இன்று முதல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.