இ-பதிவு செல்லாது.. தமிழ்நாட்டின் இந்த 5 பகுதிகளுக்கும் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. கவனம் மக்களே!
சென்னை: தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 5 பகுதிகளுக்கு செல்ல மட்டும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரளவுக்கு கூடுதல் சலுகைகளும், பிற 27 மாவட்டங்களில் சலூன்கள் திறப்பது உள்ளிட்ட இன்னும் அதிகப்படியான சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளன.
அதே நேரம் இ-பதிவு செய்துகொண்டு வேலைக்கு செல்வோர் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த வேலைக்கு செல்வோர் இ-பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 பகுதிகளுக்கு செல்வதற்கு இ பதிவு செய்வது போதாது. இ பாஸ் வாங்குவது மட்டும்தான் செல்லத்தக்கது ஆகும் .
தமிழ்நாடு ஊரடங்கில் வந்தாச்சு தளர்வுகள்.. இ-பதிவு யாருக்கெல்லாம் அவசியம்? முழு விளக்கம்
5 பகுதிகள்
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் குற்றாலம் ஆகியவை சுற்றுலா தலங்கள் என்பதால், அங்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு கடந்த முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்தபோது அறிவித்தது. அந்த உத்தரவு இப்போதும் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இ பதிவு மற்றும் இ பாஸ் வேறுபாடு
இ பதிவு மற்றும் இ பாஸ் ஆகிய இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இ பதிவு என்பது நம்மைப் பற்றிய தகவல்களை வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டு நாம் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று வரலாம். இ-பாஸ் என்றால் நீங்கள் என்பதற்கு நீங்கள் விண்ணப்பித்த பிறகு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒப்புதல் தர வேண்டும். அந்த ஒப்புதல் அனுமதியை நீங்கள் பெற்றுக்கொண்டு காவல்துறையினர் வழி மறித்தால் அதை காண்பிக்க வேண்டும்.
பாஸ் இருந்தால் போகலாம்
நான் பதிவு செய்து விட்டேன், அதனால் அங்கே செல்கிறேன் என்று சொல்ல முடியாது. ஐந்து பகுதிகளும் சுற்றுலா தலம் என்பதால் இந்த காலகட்டத்தில் சுற்றுலா செல்லக் கூடாது என்று தடை விதிக்கும் வண்ணம் இவ்வாறு ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்லும் நோக்கத்துடன் பலரும் கேட்டு விண்ணப்பித்த வருவதால் சுமார் 90 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன .
போலி விண்ணப்பங்கள்
பெரும்பாலான விண்ணப்பங்கள் பொய் சொல்லி சுற்றுலா செல்லும் நோக்கத்தோடு வருகின்றன. இதனால் அவற்றை பரிசீலனை செய்து தள்ளுபடி செய்வதாக நீலகிரி கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இ பாஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மருத்துவ தேவை அல்லது அவசர தேவை என்று குறிப்பிட்டு தான் மேற்கொண்ட 5 இடங்களுக்கும் விண்ணப்பம் செய்ய முடியும். ஆனால் இங்கு வரக்கூடிய விண்ணப்பங்கள் பலவும் அவ்வாறு காரணங்களை குறிப்பிட்டு இருந்தாலும் அதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் தள்ளுபடி ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.