மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை.. ஆனால் சரியான சான்றிதழ்கள் அவசியம்
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை.. ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்றிதழ்கள் அவசியம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் இபாஸ் எடுக்க வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவாக 27000த்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் நேற்று ஒரே நாளில் 250ஐ நெருங்கியது. இதையடுத்து தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்தது.
பேருந்துகள் இயங்க தடை
இதன்படி தமிழகத்தில் நாளை(மே10) முதல் மே 24ம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிது. இதேபோல் தனியார், அரசு பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் வாடகை கார்கள், வாடகை வாகனங்கள், கேப்கள், ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சான்றிழ்கள் தேவை
மாவட்டங்கள் இடையே மற்றும் மாவட்டங்களுக்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற போதிலும், மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடையில்லை. ஒரு மாவட்டத்தில் இருந்து இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இபாஸ் அவசியம் இல்லை. ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் காரணமாக செல்ல சரியான சான்றிதழ்கள் அவசியம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. எனவே கிட்டத்தட்ட இதுவும் கடுமையான கட்டுப்பாடுகள் தான்.
எப்படி எடுக்க வேண்டும்
மாவட்டங்களுக்கு இடையே இ பாஸ் இல்லை என்றாலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர கட்டாயம் இபாஸ் எடுக்க வேண்டும். வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக https://eregister.tnega.org/#/user/pass இணையதளத்தில் இபாஸ் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
சான்றிதழ்கள் அவசியம்
கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போக்குரவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காகவும், திருமணத்திற்காகவும், நெருங்கிய உறவினர்களின் இறப்பு மற்றும் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காகவும் மட்டுமே வாகனங்களில் பயணிக்க போலீசார் அனுமதிப்பார்கள். அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.