இ பாஸ் ஈசியானதால் சென்னையில் இருந்து செல்பவர்களும் சென்னைக்கு திரும்ப வருபவர்களும் அதிகரிப்பு
இ பாஸ் பெறுவதற்கான விண்ணப்பம் பெறும் முறை எளிதானதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களும் வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு பரனூர்
சென்னை: தமிழ்நாட்டில் இபாஸ் நடைமுறை எளிதாகியுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமனோர் சொந்த ஊர் செல்வதும் ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதும் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள், கார்களில் ஏராளமானோர் வருவதால் சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தொடங்கி தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இடையில் தொற்று குறைவாக இருந்ததால் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்கப்பட்டது. மண்டலம் விட்டு மண்டலம் சென்றால் மட்டும் இபாஸ் எடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது,
ஆனால் தொற்று பரவல் கடுமையாக அதிகரித்ததால் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இ பாஸ் தளர்வு ரத்து செய்யப்பட்டது. இபாஸ் தருவதும் கடுமையாக்கப்பட்டது. இதனால் மக்கள் இ பாஸ் பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக மாறியது, முறையாக விண்ணப்பித்தாலும் இ பாஸ் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.
இ பாஸ் ஈசியா கிடைக்கும்
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதை அடுத்து அரசு விண்ணப்பித்த அனைவருக்கும் இன்று முதல் இபாஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் படி தமிழகத்தில் இன்று முதல் புதிய இ பாஸ் நடைமுறை அமலுக்கு வருகிறது இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இ பாஸ் தளர்வு இன்று முதல் அமல்
விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் உடனுக்குடன் கிடைக்கும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இ பாஸ் தளர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, ஆன்லைனில் முறையான காரணங்களுக்காக விண்ணப்பித்தால் உடனடியாக, இபாஸ் கிடைக்கிறது.
கடும் போக்குவரத்து நெரிசல்
இபாஸ் நடைமுறை எளிதானதால் சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் இருந்து ஏராளமனோர் சொந்த ஊர் செல்லத்தொடங்கியுள்ளனர். பொது போக்குவரத்து இல்லாத காரணங்களினால் கார்கள், இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர் செல்லத் தொடங்கியுள்ளனர்.
ஊருக்கு போவதில் மகிழ்ச்சி
ஏற்கனவே சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதையும் காண முடிகிறது. பொதுப்போக்குவரத்து இல்லாத காரணங்களினால் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பயணிப்பதை காண முடிகிறது. இதன் காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக சொந்த ஊர் போகமுடியாதவர்கள் இப்போது மகிழ்ச்சியோடு ஊர் திரும்பி வருகின்றனர். சிலரோ ஊரையே காலி செய்து கொண்டு சொந்த ஊருக்கு செல்வதையும் காண முடிகிறது.
தவறான காரணம் சொல்லக்கூடாது
நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான காரணங்களை சொல்லி இ பாஸ் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.