மாவட்டத்திற்கு 2 குழு அமைப்பு.. இனி உடனுக்குடன் இ பாஸ் வழங்கப்படும்.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டத்திற்கு 2 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நாடு முழுக்க தற்போது 7வது கட்ட ஊரடங்கு காலத்தில் இருக்கிறது. அன்லாக் 3.0 காரணமாக, பல்வேறு மாநிலங்களும், இ பாஸ் நடைமுறையை நீக்கிவிட்டன.
அங்கெல்லாம், மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ பாஸ் தேவை கிடையாது என்று அறிவித்துள்ளதால் மக்கள் எளிதாக பயணிக்கிறார்கள்.
ரூ.3000 கொடுத்தால் இ பாஸ்.. அதிகரித்த ஏஜென்ட்கள்.. உஷாரான தமிழக அரசு.. ஈஸியாக பாஸ் கிடைக்க நடவடிக்கை
இ பாஸ்
கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் மாநில அரசு பொது போக்குவரத்தை கூட இயக்கி வருகிறது. இத்தனைக்கும் அங்கு தமிழகத்தைவிட, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. மற்றொரு பக்கம், தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுப் போக்குவரத்து கிடையாது. இ பாஸ் நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடுகள்
இ பாஸ் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எளிதாக பாஸ் கொடுக்கப்படுவது, கலெக்டர் அலுவலகத்துடன் தொடர்பில் இருக்கக் கூடிய ஏஜெண்டுகள் மூலமாக 2000 அல்லது 3000 ரூபாய் செலுத்தி முறைகேடாக இ பாஸ் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்த நிலையில்தான், இ பாஸ் நடைமுறையை ஒழித்து கட்டிவிடலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கொரோனா வைரஸ் எளிதாக பரவிவிடும் என்ற காரணத்தால் இ பாஸ் நடைமுறையை நீக்காமல் அதேநேரம் தளர்வுகள் கொண்டுவருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
எளிமை
இது தொடர்பாக திண்டுக்கல்லில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது: தமிழகம் முழுக்க இ பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு இ பாஸ் வழங்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒரு குழு செயல்பட்டது. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு, உடனுக்குடன் இ பாஸ் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இ பாஸ் குழு
இ பாஸ் வழங்குவதில் எந்த தடையும் கிடையாது. ஆனால் முறைப்படி, உண்மையாக ஏதாவது காரணம் இருந்தால் பிற மாவட்டங்களுக்கு இ பாஸ் பெற்றுச் செல்லலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக அரசு இ பாஸ் வழங்குவதை எளிமைப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்ததை குறிப்பிட்டு, நமது 'ஒன்இந்தியாதமிழ்' செய்தி வெளியிட்டிருந்த, அடுத்த 2வது நாளில், முதல்வரின் பேட்டி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களுக்கு தடையில்லை
இதனிடையே, மதுரையில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறுகையில், தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு இ-பாஸ் வழங்க எந்த தடையும் இல்லை. இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். முறைகேடுகளை தடுக்கத்தான், 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு இடையூறு செய்வதற்காக இ-பாஸ் முறை உருவாக்கப்படவில்லை. மக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை தடுக்கவே இ-பாஸ் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.