'இ.வெ.ராமசாமி நாயக்கர்'.... குரூப் 2 தேர்வு வினாவில் விஷமம்... அதிர்ச்சியில் தமிழகம்!
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட வினாவில் தந்தை பெரியாரின் பெயர் எழுத்துப் பிழையோடு அச்சடிக்கப்பட்டிருந்ததோடு, சாதியை ஒழிக்கப் போராடியவரின் பெயரை சாதிப் பெயருடன் போட்டுள்ளனர். இது குறித்து தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1,199 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. 2, 268 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர்.
இந்நிலையில் வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியர் யார் என்று கேட்கப்பட்டிருந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாவிற்காக கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளில் முதல் விடை ஈ.வெ.ராமசாமி நாயக்கார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் தமிழில் தவறுதலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
[பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி]
சாதிப்பெயரோடு பெரியார்
மற்ற 3 விடைகளாக காந்தி, ராஜாஜி,சி.என். அண்ணாதுரை என்று கொடுக்கப்பட்டிருந்தது. சாதிகளை ஒழிக்க பாடுபட்ட தலைவரின் பெயரையே இப்படி சாதியின் பெயரோடு குறிப்பிட்டதோடு அல்லாமல் தமிழில் தவறாக அச்சிட்டிருந்தது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஷம டிஎன்பிஎஸ்சி
இந்நிலையில் வினாத்தாளில் செய்யப்பட்டிருந்த விஷமம் குறித்து டிஎன்பிஎஸ் அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். குரூப் 2 வினாத்தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்பது முழுவதும் தெரியவில்லை, நிபுணர்கள் குழு தான் கேள்விகளை தயார் செய்தனர். வினாத்தாள் பிரச்னை குறித்து நவம்பர் 13 முதல் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பெரியாருக்கு மட்டும் ஏன்
வினாத்தாள் பிரச்னை பற்றி நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். ஆனால் திட்டமிட்டே டிஎன்பிஎஸ்சி செய்யும் விஷமம் இது என்று சிலர் கூறுகின்றனர். பெரியாருக்கு மட்டும் ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிட்டவர்கள் ராஜாஜியை ஏன் ராஜகோபாலாச்சாரி என்று குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நியாயப்படுத்தவா
ஏற்கனவே தமிழில் வினாக்கள் தயாரிக்க ஆட்கள் இல்லை என்று கூறி வருகிறது டிஎன்பிஎஸ்சி. இதில் தமிழில் தவறாக தலைவர் ஒருவரின் பெயரை அச்சிட்டு இதையே காரணம் காட்டி தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதா டிஎன்பிஎஸ்சி என்ற சந்தேகமும் எழுகிறது.