ஸ்டாலினுக்கு பின்னால் வெற்றிடம் இருக்காது.. அதான் உதயநிதி இருக்கிறாரே.. எ.வ.வேலு பரபரப்பு பேச்சு
சென்னை: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு பின்னால் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக உதயநிதி சிறப்பாக பணியாற்றி வருகிறார் என அமைச்சர் எ.வ.வேலு பாராட்டி பேசினார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்றைய தினம் பிறந்தநாள். இந்த விழாவில் தனக்கு பரிசுகளோ இனிப்புகளோ கொடுக்காமல் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவினால் சந்தோஷப்படுவேன் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னையில் அடைமழை பெய்த போதிலும் உதயநிதியின் வீட்டிற்கு காலையிலேயே மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவிக்க சென்றிருந்தனர்.
செய்தித்தாள்கள்
பேனர் கலாச்சாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு செய்தித்தாள்கள், சமூகவலைதளங்களில் உதயநிதியை வாழ்த்தி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அதில் இளைய சூரியன், எங்கள் இளைய தலைவரே, உதய சூரியனில் பாதி, கருணாநிதியில் பாதி, மூன்றாம் கலைஞரே, திராவிட சூரியனே, மனிதநேய உதய நாள், எங்களின் எதிர்காலமே என பல்வேறு அடைமொழிகள் கொடுக்கப்பட்டன.
திமுக
இந்த அடைமொழிகளை பார்க்கும் போது திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதிதான் என்பதை நிர்வாகிகள் மறைமுகமாக காட்டிவிட்டனர். இந்த நிலையில் சென்னையில் மூத்த அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் உதயநிதிக்கு விழா எடுத்து வருகிறோம்.
பிறந்தநாள்
தமிழனத்திற்கு உதயநிதி தேவைப்படுகிறார். பிறந்தநாள் விழா எடுப்பதன் மூலம் அவருக்கு ஒரு உந்து சக்தி ஏற்படும் என தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்யாததை உதயநிதி ஸ்டாலின் செய்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் மகத்தான வெற்றிக்கு உதயநிதி செய்த பிரச்சாரங்கள்தான். அதனால் அவரது பணியை சிறப்பிக்கவும் ஊக்கப்படுத்தவும் இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி
தமிழகத்தில் இரு ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவை அடுத்து அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தனர். அந்த வெற்றிடத்தை நிரப்ப எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அமைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் செல்வாக்கு ஸ்டாலினுக்கு கிடைத்ததால் அந்த வெற்றிடத்தை நிரப்ப சரியான நபர் ஸ்டாலின் என பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.