சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. அதிமுகவுக்கு ஆதரவு தாங்க.. மோடியிடமே நேரடியாக கேட்ட எடப்பாடி!
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றிக்கு, பாஜக தனது முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ள இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக போட்டியிடுகிறது. திமுகவைப் பொறுத்த அளவில், நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் களம் இறங்குகின்றன.
இந்த நிலையில், இதுவரை இந்த இரு தொகுதிகளுக்கும் கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை அதிமுக கேட்கவில்லை. இது பொதுவெளியில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.
வேலூரிலும் இப்படியே
வேலூர் லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின்போது பாஜக தலைவர்கள் யாருமே அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. கணிசமாக உள்ள, முஸ்லிம்கள் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்பதால் பாஜகவை திட்டமிட்டு அதிமுக தலைமை தவிர்த்ததாக அப்போது கூறப்பட்டது. இப்போதும் பாஜகவிடம் அதிமுக விலகி இருக்கும் நிலைப்பாடு பற்றி சில தமிழக பாஜக தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முறைப்படி ஆதரவு
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறைமுகமாக தனது அதிருப்தி தெரியப்படுத்தி இருந்தார். இதுதொடர்பாக ஊடகங்கள் சார்பில், அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது, "தற்போது தமிழக பாஜகவுக்கு தலைவர் என்று யாருமே இல்லை. எனவேதான் முறைப்படி ஆதரவு கேட்க முடியவில்லை" என்று விளக்கம் அளித்தனர்.
ஏன் கேட்கவில்லை
தலைவர் இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்த பெரிய பதவியாக கருதப்படக் கூடிய, பாஜக கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளரிடம் அதிமுக சார்பில் ஆதரவு கேட்டிருக்கலாம். ஏன் கேட்கவில்லை என்று கேள்விகள் எழுந்தன. கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகளிடம் அதிமுக தரப்பு, ஆதரவு கேட்டு அவர்களும், இடைத்தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டனர்.
ஆதரவு
பாஜகவை மட்டும் அதிமுக தீண்டத்தகாத கட்சியாக நடத்துகிறதா என்ற முணுமுணுப்புகள் பொதுவெளியில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவு அளிக்கப்படும் என்று மோடி தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக வாக்கு வங்கி
நாங்குநேரியில் பாஜகவின் வாக்கு வங்கி சுமார் 10,000 ஓட்டுக்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. எனவே அந்த தொகுதியில் அதிமுக வெற்றிக்கு பாஜக பங்களிப்பு கணிசமாக உதவும் என்பது அரசியல் விமர்சகர்களின், பார்வையாக உள்ளது. இந்த நிலையில்தான் மோடியிடமே நேரடியாக அதிமுக தனது ஆதரவை கேட்டுள்ளது.