அதிகாலையில் சாரல் மழை... ஜில் வானிலையால் மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்
சென்னையில் பல பகுதிகளில் அதிகாலையில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: அதிகாலையில் ஜில்லென பெய்த சாரல் மழையால் சென்னையின் வானிலை மாறியுள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை, வேளச்சேரி, தியாகராயநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. இன்று காலையில் நகரின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில் புறநகர் பகுதிகளிலும் கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், அனகாபுத்தூர், பூவிருந்தவல்லி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
Recommended Video
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மையம் கணித்தது போலவே சென்னையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் பெய்த சாரல் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.