மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சூப்பர் ஐடியா
சென்னை: படித்த பட்டதாரி இளைஞர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டால் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
படித்து முடித்துவிட்டு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள் லட்சக்கணக்கான பட்டதாரிகள். என்னதான் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதினாலும் வேலை என்பது கிடைப்பது சில பேருக்குத்தான். இதனால் தனியார் வேலைகளில் கிடைக்கும் குறைந்த சம்பளத்திற்கு இளைஞர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீன் வளர்ப்பு மூலம் சுய தொழில் தொடங்கி சம்பாதிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
தேசிய மீன் வளர்ப்பு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, எந்தெந்த மீன்களை வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்பது தொடர்பான கையேட்டை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களே, சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால், மீன் வளர்ப்பு தொழிலில் முழுமையாக ஈடுபட்டு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஆயிரம் கோடியில் ஆபரேஷன் தாமரை.. மாஃபியா பாணியில் கடத்தல்! பாஜகவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு
இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும். கடல் மீன் உணவுகளின் தேவை அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறையும். வேகமாக வளரக்கூடிய மீன்களான கட்லா, மிர்கால் உள்ளிட்ட மீன்கள் மற்றும் கடல்பாசிக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. அவற்றை வளர்ப்பதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் மீன்கள் ஏற்றுமதியாகிறது. உலகளவில் அலங்கார மீன்களின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கிறது" இவ்வாறு கூறினார்.