அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சென்னை: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. மிக கடுமையான நிலநடுக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன.
கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்த நிலநடுக்கம் உணரப்படுகிறது. நேற்றைய தினம் காலை 11.05 மணிக்கு முதலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில், மூன்றாவதாக 2.06 மணிக்கு 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது.
பிறகு, இதையடுத்து பிற்பகல் 2.37, 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் 4.4 ரிக்டர் அளவாக பதிவானது. இதைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது போர்ட் பிளேயர் அருகே 4.6, 3.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, இன்று அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. மேலும் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ தொலைவில் இன்று அதிகாலை காலை 5.57 மணிக்கு ஏற்பட்டதாக 5.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தொடர் நிலநடுக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்களுக்கும், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபாரை அதிர வைத்த நிலநடுக்கம்..அடுத்தடுத்து 6 முறை கடலுக்குள் அதிர்வு