ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து!
சென்னை: ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அன்பு, கருணை, மனிதநேயம் போன்றவற்றின் அடையாளமாக திகழும் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த இந்த நாள் கிறிஸ்தவ பெருமக்களின் இனிய நாளாகும் என கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடருவதற்கான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வாக்கு எந்திரங்களில் எழுதியிருக்கிறார்கள்.
தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகி விடும்.
தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். தமிழக மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அதற்காக இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நாளில் அனைத்துத் தரப்பினரும் உறுதியேற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறுகையில், நியாயமும், சத்தியமும், தியாகமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு உலகளாவிய கிறிஸ்தவ பெருமக்களால் நம்பப்படுகிறது.
இந்த ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம் என கூறியுள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும். அந்தகார இருள் விலகி, ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசு பெருமான் உயிர்த்து எழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடுகின்றார்கள்.
வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களுக்குத் தாங்குதல் தரக்கூடிய மன வலிமையையும், உறுதியையும் தரக்கூடிய வகையில், உயிர்த்து எழுதல் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்துகின்ற ஈஸ்டர் திருநாள் மலர்ந்துள்ளது. வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் கவலையோடும், துன்பத்தோடும் அழிவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்ற மக்களுக்கு இந்நாள் நம்பிக்கை ஊட்டுகின்றது. அச்சத்தைத் தள்ளி, எழுச்சியின் உச்சத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது.
'நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்' என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவற்றில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.