உச்சகட்ட தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் சென்னை.. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி-க்கு பதில் ஃபேன்
சென்னை: சென்னையில் சுரங்கவழி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே சுரங்கவழி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடல் அலை போல காணப்படும் மக்கள் தொகையால், சென்னை மாநகரம் தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. தண்ணீர் லாரிக்காக இரவு தூங்காமல் கூட மக்கள் தெருக்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீ்ா பஞ்சத்தின் உச்சகட்டமாக ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தங்கள் ஊழியர்களுக்கு தேவையன அத்தியாவசிய நீரை கூட விநியோகிக்க முடியாததால், பிரபல ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு தங்களது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை மெட்ரோ ரயிலுக்கு தினமும் 9,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஏசி-க்கு மட்டுமே சுமாா் 7,200 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. தலைநகரில் உச்சகட்ட தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஏசி இயக்கப்படும். மற்ற நேரங்களில் நிறுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியிட்ட போது இருந்த நிலைமையை விட, தற்போது சென்னை நகரின் நிலைமை படுமோசமாகிவிட்டது. இதனையடுத்து தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தற்போது சுரங்கவழி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக சுரங்கவழி மெட்ரோ ரயில் நிலையங்களில், மின்விசிறி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏசி பயன்பாடு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சுரங்கங்களில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை பயன்படுத்துவதில் மிகவும் அவதி ஏற்படுவதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளியில் ஏற்கனவே கோடை வெயில் தகிக்கும் நிலையில், காற்றோட்டத்திற்கு சிறிதும் வழியில்லாத சுரங்கவழி மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் நேரம், வியர்வை மழையில் குளிக்க நேர்வதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏசி பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டதால், சுரங்கவழியில் மெட்ரோ ரயிலுக்காக 10 நிமிடங்கள் காத்திருப்பது, 10 மணி நேரம் காத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக மெட்ரோ ரயில் பயன்படுத்த நினைப்பதே துரித வேகம் மற்றும் ஏசி பயன்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக தான் என குறிப்பிட்டுள்ள பயணிகள், ரயில் நிலையங்களில் நிலவும் கடும் உஷ்ணத்தால் புழுக்கத்தில் சிக்கி தவிக்க நேரிடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
முதற்கட்டமாக அண்ணா நகர் கிழக்கு ரயில் நிலையத்திலிருந்து மின்விசிறிகள் பொருத்தும் பணிகள் நடபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக மின்விசிறி பொருத்தும் பணி சுரங்க ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக, மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.