தேர்தல் ஆணையம் நன்றாக நாடகம் நடத்தியுள்ளது.. டிடிவி தினகரன் பகீர் குற்றச்சாட்டு!
கருத்து கேட்பு என நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கருத்து கேட்பு என நாடகத்தை நடத்தி திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டு இருந்த திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக, பாஜக என பல கட்சிகள் இந்த அறிவிப்பை வரவேற்று இருக்கிறது. ஆனால் அமமுக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து நிறைய டிவிட் செய்துள்ளார்.
|
தேர்தல் ஆணையம் தவறு
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.
|
ஜனநாயக விரோத செயல்
இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.
|
அ.ம.மு.க. வெற்றி
திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டணையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏமாற்றம்
ஏற்கனவே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த எஸ்.காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வனும் தேர்தல் ஆணையம் சதி செய்துள்ளது என்று இதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இப்போது அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.