அடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..!
வரும் 14 முதல் மெரினா கடற்கரை திறக்கப்படுகிறது
சென்னை: சென்னை மெரினா கடற்கரை பல மாதங்களுக்குப் பிறகு மக்களுக்காக திறக்கப்படுகிறது.. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். மெரீனா பீச் மூடப்பட்டது முதல் முறையல்ல.
சென்னையின் பிரம்மாண்டமான அடையாளங்களில் ஒன்று மெரினா.. இந்திய மாநகரங்களில் அமைந்துள்ள கடற்கரைகளில் மிக நீளமானதும், உலகின் 2வது நீளமான கடற்கரை என்ற பெருமையையும் பெற்றது..
இந்த மெரினா தமிழக வரலாற்றில் எத்தனை முறை பேசப்பட்டுள்ளது என்பதைவிட, எத்தனை முறை பூட்டப்பட்டுள்ளது என்பதுதான் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.. காரணம், மக்களின் பொழுது போக்கும் இடத்தை மூடும் உரிமை யாருக்குமே இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ள நிலையில், பீச்சை மூடுவது என்பது பாதுகாப்புக்கான ஒன்றாக இருந்தாலும், மற்றொரு புறம் சர்ச்சையாகவும், ஆதங்கமாகவும் ஒவ்வொரு முறையும் பார்க்கப்படுகிறது.
சென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
மெரினா
அன்றைய காலங்களில் தலைவர்களின் அரசியல் கூட்டம் என்றாலே அது மெரினாதான்.. பல்வேறு புரட்சிகளுக்கும், எழுச்சிகளுக்கும் இதே மெரினாதான்.. அதற்கு பிறகு வெறும் பொழுதுபோக்கு இடமாகவே பெரும்பாலும் அறியப்பட்டுவந்த மெரினா, கடந்த 3 வருஷத்துக்கு முன்புதான் புரட்சி களமாக மாறியது... மெரினா என்ற அக்னி சொல், உலக ஏட்டில் ஜல்லிக்கட்டு மூலம் அரங்கேறியது.
மெரினா புரட்சி
மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்க வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் தன்னிச்சையாகவே திரண்டு நடைபெற்ற போராட்டம் "மெரினா புரட்சி" என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றும் விட்டது. ஒரு பொழுதுபோக்கு களம் புரட்சியாய் உருவெடுக்கும் என்று யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை... அதேசமயம், ஜல்லிக்கட்டிற்கான தடையை மெரினா புரட்சி சுக்குநூறாக உடைத்தெறிந்தது. இளைஞர்கள் முன்னெடுத்த இந்த சமகால போராட்டத்துக்கு மெரினா சாட்சியாக இன்றும் நிற்கிறது!
சுனாமி
அதேசமயம், 2004 டிசம்பர் 26-ம் தேதி வந்த சுனாமியின்போது, நூற்றுக்கணக்கானோரை சுருட்டி கொண்டது.. அப்போது, எதிரே இருந்த எழிலகம், யூனிவர்சிட்டி உட்பட எல்லா இடங்களிலும் தண்ணீர் புகுந்தது.. அப்போது ஒரு வார காலத்துக்கு மெரினாவுக்கு யாரும் செல்ல அனுமதி தரப்படவில்லை.. பீச்சை கிட்டத்தட்ட பூட்டி விட்டனர். அதுதான் மெரீனா முதல் முறையாக பூட்டப்பட்ட சம்பவம்.
ஜல்லிக்கட்டு
கடந்த 2017ம் ஆண்டு மெரீனா பீச்சை 2வது முறையாக சங்கிலி கட்டி மூடினர். மாணவர்கள் போராட்டம் நடக்கலாம் என்ற அச்சத்தால் பீச்சை மூடியது போலீஸ். பின்னர் அது திறக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு வாய்ந்த மெரினா பீச், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜுன் 1-ம் தேதி அன்று மீண்டும் இழுத்து மூடப்பட்டது.. இதுவும் வரலாற்றில் நடக்காத ஒன்று..
சென்னைவாசிகள்
இப்படி மெரினா பூட்டப்பட்டு கடந்த பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது திறக்கவுள்ளனர். சென்னை மக்களின் முக்கிய அங்கம் மெரீனா பீச்.. அப்படிப்பட்ட பீச்சுக்குப் போக முடியாமல் சென்னைவாசிகள் நொந்து போய்விட்டார்கள்.. அவர்களுக்கு இருக்கும் பிரதான பொழுதுபோக்கு இடம் இந்த மெரினாதான்.. தியேட்டர்கள் திறக்கிறார்கள், டாஸ்மாக் திறக்கிறார்கள், கோயில்கள் திறக்கிறார்கள், இங்கெல்லாம் வராத தொற்று மெரினாவை திறப்பதினால் மட்டும் வந்துவிட போகிறதா? என்று கேள்விகளும் எழுந்தன.
முதல்வர் உத்தரவு
எப்போது பீச்சை திறக்க போகிறீர்கள் என்று அரசுக்கு சென்னை ஹைகோர்ட்டும் கேள்வி எழுப்பி வந்த நிலையில்தான், பீச்சை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. என்னதான் இழுத்து பூட்டினாலும் சரி, பூட்டாவிட்டாலும் சரி, மெரினாவுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. அது எப்போதுமே கடலாகவே பரந்து விரிந்து கிடக்கிறது.
நெஞ்சம் குளிர்ந்துள்ளது
இன்றைய முதல்வரின் அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு தேனாய் வந்து காதில் பாய்ந்துள்ளது.. மெரீனா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த பீச்தான் என்பதால், அவர்களின் நெஞ்சம் குளிர்ந்துள்ளது.. பொதுமக்கள் இனி மெல்ல படையெடுத்து, தங்கள் மனதின் சுமைகளை இங்கே மணற்பரப்பில் இறக்கி வைப்பார்கள்.. காதலர்கள் சங்கமிப்பார்கள்.. ஒவ்வொரு முறையும் அலைகள் கரைக்கு வரும் போதும் அவை அவர்களிடம் எதையோ சொல்ல முயன்று முயன்று போகும்! ஆக மொத்தம், மெரினாவின் உப்புக் காற்றினை நுகர சென்னைவாசிகள் ரெடியாகி விட்டனர்.