சாமி பேர் சொன்னாலே ஸ்டாலினுக்கு கோபம் வரும்.. முதல்வருக்கு அப்படி இல்லை.. ராஜேந்திர பாலாஜி பொளேர்!
அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார்
சென்னை: "ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும்.. முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர்.. இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக தலைவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்!
ஓய்ந்திருந்த கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.. அதனால் 5-ம் கட்ட லாக்டவுன் அமலில் உள்ளது.. ஊரடங்கிற்குள் ஊரடங்கு ஒரு பக்கம், படிப்படியான தளர்வுகள் மறுபக்கம் என தமிழகம் நகர்ந்து வருகிறது.
இந்த சமயத்தில், கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முடியும் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு. "இறைவனுக்குத்தான் தெரியும், நாம் என்ன டாக்டரா?" என்று முதல்வர் கேட்டிருந்தார்.
தெய்வபக்தி உள்ளவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி... திமுக மீது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாடல்
முதல்வர்
முதல்வர் கேட்ட இந்த கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. "தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவுமில்லை... செய்ய தெரியவில்லை.. செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.. இறைவன் தலையில் பழியையும்,பாரத்தையும் ஏற்ற முதல்வர் முயற்சி"என்று கூறியிருந்தார்.
ராஜேந்திர பாலாஜி
ஸ்டாலினின் இந்த கண்டன அறிக்கைக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் சொல்லும்போது, "அதிமுக அரசு தான் என்னவோ கொரோனாவை தோற்றுவித்தது போல தினமும் இப்படி அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்... அறிக்கைகளால் மக்களை குழப்புவது, அவதூறாக கருத்து வெளியிடுவது இதெல்லாம் கண்டனத்திற்குரியது.
அரசு மீது பழி
வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால்தான் தமிழகத்தில் கொரோனா பரவியது... கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் அரசு ஈடுபட்டு வருகிறது.. தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல ஸ்டாலினின் அறிக்கை இருக்கிறது.. அதனால் இந்த அரசு மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.
கடவுள் பக்தி
இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர்.. ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும்" என்றார்.
பதிலடிகள்
முன்பெல்லாம் முதல்வரே நேரடியாக இறங்கி திமுக தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கொண்டிருந்த நிலையில், சில நாட்களாக அந்த பணியை ராஜேந்திர பாலாஜி கையில் எடுத்துள்ளார் போலும்.. தொடர்ந்து திமுக தலைவர் மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து, பதிலடிகளை தந்து வந்து கொண்டிருக்கிறார்!!