நயினார் நாகேந்திரன் புலம்புகிறார்.. எடப்பாடியார் அழைக்கிறார்.. குக செல்வம் ஓடுகிறார்.. என்ன நடக்குது
நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் அழைக்க என்ன காரணம்?
சென்னை: நயினார் நாகேந்திரன் ஒரு பக்கம் புலம்புகிறார் என்றால், மறுபக்கம் எடப்பாடியார் கட்சியில் சேருமாறு பகிரங்கமாகவே அழைப்பு விடுக்கிறார்.. என்ன காரணம்? என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?!
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர். அவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதும் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.
அது மட்டுமல்ல.. உடனடியாக அவருக்கு கட்சியில் மாநிலத் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது அப்போதே ஆச்சரியமாக பார்க்கப்பட்டது... நடந்து முடிந்த எம்பி தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பொன்.ராதாவின் விருப்பத்தையும் தாண்டி, நயினார் நாகேந்திரன் அந்த தொகுதியை தட்டி சென்றார்.
பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
துணை தலைவர்
தமிழிசை ஆளுநராக தெலுங்கானா சென்றுவிட்ட பிறகு, தமிழகத்தின் புதிய தலைமைக்கான லிஸ்ட்டில் நயினார் பெயரும் இருந்தது.. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.. இருந்தாலும், தலைவர் பதவி இல்லை என்றாலும், பொதுச் செயலாளர் போன்ற முக்கிய பதவியாவது தனக்கு கிடைக்கும் என்று நயினார் எதிர்பார்த்தார் போலும்.. ஆனால் மறுபடியும் துணைத் தலைவராகவே நியமிக்கப்பட்டார்.
பேட்டி
அப்போதிருந்தே நயினார் அப்செட் என்கிறார்கள்.. முக்கியத்துவம் இல்லாததால், பாஜகவிலிருந்து இடம் மாற தயாராகிறாரா என்ற கேள்விகளுடன் செய்திகளும் வலம் வந்தபடியே இருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பேட்டியில் தன்னுடைய அதிருப்தியை பகிரங்கமாகவே நயினார் வெளிப்படுத்த, அதிமுக ஒரு பக்கமும், திமுக ஒரு பக்கமும் தூண்டில் போட்டது.
அதிமுக
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, தன் முடிவை பாஜகவுக்கு சாதகமாகவே நயினார் மாற்றி கொண்டதாக கூறப்பட்டது.. இதற்கு காரணம், பாஜக தரப்பில் நயினாரை கூப்பிட்டு சமாதானம் செய்திருக்கலாம் என்கிறார்கள்.. இது தெரிந்ததும் திமுகவும் நயினாரை தன் பக்கம் இழுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை. எனினும், அதிமுகதான் விடாமல் உள்ளது.. ஏற்கனவே அமைச்சர் உதயகுமார், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் மீண்டும் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள்... அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள்... அவர அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
முதல்வர்
இந்த விஷயத்தில் ஒரு படிமேலே போய் நேற்று முதலமைச்சரே நயினாருக்கு அழைப்பு விடுத்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. மறுபடியும் கட்சிக்கு திரும்பி வந்தால் அதிமுகவில் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடியார் ஏன் சொன்னார்? ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு, மாற்று கட்சியில் உள்ளவரை முதல்வரே அழைக்கிறார் என்றால் என்ன காரணம்? இதனால் கூட்டணிக்குள் மேலும் விரிசல் வராதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆளுமைகள்
ஏற்கனவே பாஜகவில் நிறைய புலம்பல்கள் எழுந்து வருகின்றன.. குக.செல்வம் நிலைப்பாடு என்ன என்றே இதுவரை பிடிபடவில்லை... இப்போது நயினார் நாகேந்திரன் போன்ற வலிமை மிக்க ஆளுமைகள் அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்று முதல்வர் விரும்புகிறாரா, அல்லது வரப்போகும் சட்டமன்ற தேர்தலின் காய்நகர்த்தலின் ஒரு முயற்சியா இது என்றும் தெரியவில்லை.
எடப்பாடியார்
அதேசமயம், நிச்சயம் பாஜகவுக்கு ஏதோ ஒரு சமாச்சாரத்தை வலிய உணர்த்த எடப்பாடி தரப்பு முயல்கிறதோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படி பார்த்தாலும், மாற்று கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரை பகிரங்கமாக அழைத்திருப்பது எடப்பாடியாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.