எடப்பாடிக்கு வரலாறே தெரியவில்லை .. டிகேஎஸ் இளங்கோவன் நக்கல்!
சென்னை : எடப்பாடி பழனிச்சாமிக்கு வரலாறு தெரியவில்லை. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நியமிக்கப்பட்டவர் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரை தரிசித்த பின், மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை துவக்கினார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கிப் பேசினார்.
கருணாநிதி போல
அவர் பேசுகையில், நான் நேரடியாக, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என, ஸ்டாலின் பேசுகிறார். அண்ணாத்துரை மறைந்த பின், கருணாநிதி சூழ்ச்சி செய்து முதல்வரானார். அவர் நேரடியாக முதல்வராகவில்லை. மக்கள் அண்ணாதுரைக்கு தான் ஓட்டளித்தனர். அதுபோலவே, நானும் முதல்வரானேன் என்றார்.
வரலாறு தெரியவில்லை
முதல்வரின் இந்த பேச்சு குறித்து திமுக செய்தி தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், எடப்பாடிக்கு வரலாறு தெரியவில்லை. 1969ல் கலைஞர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு முதலமைச்சர் ஆனார். நாவலரை இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தான் ஆதரித்தனர்.
நியமிக்கப்பட்டவர்
எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நியமிக்கப்பட்டவர். எனவே 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்ற விவகாரம் அதிமுக - திமுக இடையே பல நாட்களாக தொடர்ந்து வருகிறது.
வரலாறு பிரச்சனை
இந்நிலையில் வரலாறு தெரியவில்லை என்ற புதிய விவகாரத்தை துவக்கி வைத்துள்ளார் டிகேஎஸ் இளங்கோவன். இதற்கு அதிமுக தரப்பில் எத்தகையக பதிலடி கொடுக்கப்படவுள்ளது என்று தெரியவில்லை. முதல்வரே நேரடியாக பதில் கொடுத்து திமுக வாயை அடைப்பாரா அல்லது வேறு யாரேனும் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.