வரதட்சணை வழக்கில் இனி 10 ஆண்டு சிறை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
சென்னை: வரதட்சணை வழக்கில் 7 ஆண்டுகளாக உள்ள சிறைதண்டனை இனி 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை பாதுகாக்கும் அரசு அதிமுக அரசு எனக் கூறினார்.
இதேபோல் தவறான எண்ணத்துடன் பெண்களை பின் தொடர்ந்து சென்றால் 5 ஆண்டுகளாக உள்ள சிறைத்தண்டனை இனி 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஸ்டாலின் ஆவேசம்.. முதல்வர், அமைச்சர் பதிலை ஏற்க மறுப்பு.. வெளிநடப்பு
முதலமைச்சர் அதிரடி
தமிழகத்தில் வரதட்சணை கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்யும் மாப்பிள்ளைகளையும், மாமியார்களையும் 10 ஆண்டுகள் சிறைக்குள் தள்ளும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிவிப்பு வெளிட்ட அவர், வரதட்சணை குற்றத்துக்கான தண்டனை காலம் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
குண்டர் சட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தவறான எண்ணத்துடன் பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கு 5 ஆண்டுகளாக உள்ள சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஆயுள் தண்டனை
இதனிடையே 18-வயதிற்குள் கீழ் உள்ள பெண்களை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்படுவதாக 110- விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக அரசை பொறுத்தவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரணாக விளங்கக்கூடிய அரசு என்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசத்திற்கு இடமின்றி செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
1992-ம் ஆண்டு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் கொண்டுவரபட்டதாகவும் 1992-ம் ஆண்டு மகளிர் காவல் நிலையங்களை அமைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உரையின் போது பெருமிதம் தெரிவித்தார்.