ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கைக்கு பேரிழப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை: இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;
ஆறுமுகன் தொண்டமான் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர் எனக் கூறியுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இலங்கைக்கு பேரிழப்பு என்றும், அவரது குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்;
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சி துறை அமைச்சருமான மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் திடீரென காலமான செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மலையகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
இலங்கை: அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் இன்று நல்லடக்கம்-கோத்தபாய இரங்கல்
அவரது மறைவால் வாடும் இலங்கை ஊவா மாகாண அமைச்சர், எனது அன்பு நண்பர் மாண்புமிகு. செந்தில் தொண்டமான் மற்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மலையகத் தமிழ் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.