கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் அதிமுக எம்.எல்.ஏ.பழனி... நலம் விசாரித்த முதலமைச்சர்
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. பழனியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
தொலைபேசி மூலம் நலம் விசாரித்த முதலமைச்சரிடம், தாம் நலமுடன் இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி தெரிவித்திருக்கிறார்.
நிவாரண உதவிகள் வழங்குவதற்காக சென்ற போது எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
சாதாரண சளி, காய்ச்சல்... பற்றிக்கொள்ளும் கொரோனா பீதி... கசாயத்தை நாடும் மக்கள்
விதி விலக்கு இல்லை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் பன்மடங்கு கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இதற்கு யாரும் விதி விலக்கு இல்லை என்பதை உணர்த்துவது போல் எம்.எல்.ஏ.க்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், ஊடகத்தினர் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தொற்றி வருகிறது.
தனியார் மருத்துவமனை
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எப்படி இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க, எல்லாம் சரியாகிடும் என நம்பிக்கை அளித்துள்ளார்.
எம்.எல்.ஏ. நன்றி
அதற்கு பதிலளித்த ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.பழனி, தாம் நலமுடன் இருப்பதாகவும், அழைத்து நலம் விசாரித்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பழனியின் இளைய மகன் வினோத்திடமும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தாம் அறிவுறுத்தி உள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார்.
அதிகாரிகள்
இதேபோல் கொரோனா பெருந்தொற்றால் அதிகாரிகள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான சிகிச்சையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது சுகாதாரத்துறை. இந்த துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மூலிகை தேநீர் மற்றும் கபசுரக்குடிநீர் மூலம் சித்த மருத்துவர் வீரபாபு குழுவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.