ராஜேந்திரபாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார்... ஓ.பி.எஸ்.ஸிடம் வருத்தப்பட்ட இ.பி.எஸ்.
சென்னை: விருதுநகரில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கோபத்தில் உள்ளாராம்.
அதிமுகவில் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரபாலாஜி அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், செயல்படுவதுமாகவும் உள்ளார். இவரின் கருத்துக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல நேரங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன. இதனால் இது பற்றி பல முறை ராஜேந்திரபாலாஜியிடம் எடுத்துக்கூறியும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. எத்தனை முறை அறிவுறுத்தப்பட்டாலும் தனது போக்கில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாறவில்லை.
தன்னைப் பற்றி வார இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி காரணமாக அந்த இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் மீது நேற்று முன் தினம் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பத்திரிகையாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தியதுடன், அமைச்சருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் ராஜேந்திரபாலாஜியை பற்றி முதல்வர் தரப்பில் புகாரும் கூறியுள்ளனர். ஏற்கனவே ராஜேந்திரபாலாஜியும் பேச்சும், செயல்பாடும் முதல்வருக்கு பிடிக்காமல் இருந்த நிலையில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் மேலும் அவருக்கு கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
காப்பாற்றுங்கள் ஜி.. கொரோனா மாஸ்கில் இருந்த மெசேஜ்.. பாஜக கையில் எடுத்த செம பிளான்!
அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, உதயகுமார், போன்றோரும் ராஜேந்திரபாலாஜி இந்த விவகாரத்தில் அமைதி காத்திருக்க வேண்டும் என்றும், அவசரப்பட்டிருக்க கூடாது எனவும் அதிருப்தி தெரிவித்தார்களாம். இதனிடையே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார். அவரும் என்ன சொல்வது எனத் தெரியாமல் விசாரிப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.