பொறுத்தது போதும் குருநாதா... அமைச்சரவை மாற்றத்திற்கு இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்.தீவிரம்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கான பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளனராம்.
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதுவரை அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மட்டுமே பதவி பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார். மற்றபடி அமைச்சரவை மாற்றம் என செய்தி வந்ததே தவிர எந்த மாற்றமும் நடக்கவில்லை.
நாளிதழ்
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால், இதுவரை குறைந்தது ஒரு பத்து முறையாவது அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கும். புகாருக்குள்ளான அமைச்சர்களை பந்தாடி அவர்களிடம் உள்ள அனைத்துப் பதவிகளையும் பறித்து டம்மியாக்கிவிடுவார். அன்றாடம் நாளிதழை பார்த்தபின்னர் தான் அமைச்சர் பதவி இன்னும் நம்மிடம் தான் இருக்கிறது என அமைச்சர்களே அறிந்துகொள்வார்கள். அந்தளவிற்கு அமைச்சரவையில் அதிரடிகளை நிகழ்த்தியவர் ஜெயலலிதா. யாருக்கும் எப்போதும் அஞ்சாமல் துணிந்து நடவடிக்கை மேற்கொள்வார்.
முதல்வர் எடப்பாடி
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முழுவதுமாக மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மணிகண்டன் மீது மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மற்றபடி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாவிட்டாலும் விரிவாக்கம் கூட செய்யவில்லை. இதனால் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் போன்ற அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றன. இதனால் நிர்வாக சிக்கல் எழுகிறது.
தீவிரம்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் மட்டுமே உள்ள நிலையில் அமைச்சரவையில் சில புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகிய இருவரும் எண்ணுகிறார்கள். ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் 2 பேர் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளவு கடந்த அதிருப்தியும், கோபமும் உள்ளதாம். எப்போது எதையாவது பேசி சர்ச்சை எழுவதால் முதல்வருக்கு தான் அது தலைவலியாக மாறுகிறதாம். இதனால் புதிய முகங்கள் 2 பேரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என அவர் நினைக்கிறாராம்.
வழக்கு
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த 6 மாதமாகவே செய்திகள் வெளியாகி வந்தாலும், இதுவரை அது நடக்கவில்லை. ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் அது நடந்துவிடும் எனக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்.உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவை வெளியிட முதல்வர் யோசிக்கிறாராம்.